இலங்கை கிரிக்கெட் மீது சுவிஸ் நீதிமன்றில் முன்னாள் பயிற்சியாளர் ஹதுருசிங்க வழக்கு

இலங்கை கிரிக்கெட் அணியின் பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க, இலங்கை கிரிக்கெட் சபையிடம் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் கோரி வழக்குத் தொடுத்துள்ளார்.

அதில், இலங்கை கிரிக்கெட் தனது ஒப்பந்தத்தை தவறாக நிறுத்தி, தனது நற்பெயருக்கு சேதம் விளைவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஹதுருசிங்க ஒப்பந்தத்தின்படி, தற்போது வழக்கு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும்.

ஹதுருசிங்க அவுஸ்திரேலியாவின் சிட்னிக்கு திரும்பி அங்கு வசித்து வருகிறார். மேலும் அவரது வழக்கறிஞர்கள் இந்த வழக்கை நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹதுருசிங்க விடயத்தில் சட்டப் போரில் ஈடுபடத் தாயராக இருப்பதாக இலங்கை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனினும் ஹதுருசிங்கவுக்கு இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும், ஆனால் அது ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் போன்று பெரிய தொகையாக இருக்காது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இரு தரப்பினரும் ‘பரஸ்பர பிரிவினை’ பற்றி விவாதித்தபோது, ஹதுருசிங்க தனது ஒப்பந்தத்தில் மீதமுள்ள 18 மாத சம்பளத்தை வழங்குமாறு கோரியிருந்தார். அது கிட்டதட்ட 1 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.

இருப்பினும், சம்பளத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே கொடுக்க தயாராக இருந்தது இலங்கை கிரிக்கெட். விவாதங்கள் முட்டுக்கட்டைக்குள் முடிவடைந்த நிலையில், சட்ட நடவடிக்கை எடுக்க ஹதுருசிங்க முடிவு செய்தார்.

ஹதுருசிங்கவை 2017 ஜனவரியில் 40,000 அமெரிக்க டொலர் சம்பளம் மற்றும் பிற சலுகைகள் என கிட்டதட்ட 60,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டது. அவர் 2020 டிசம்பர் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இருப்பினும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் உலகக் கிண்ணம் முடிந்ததும், விளையாட்டு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, தலைமை பயிற்சியாளர் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

அதன் அடிப்படையில் ஹதுருசிங்க நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மிக்கி ஆர்தர் நியமிக்கப்பட்டார்.

ஹதுருசிங்காவுக்கு வழங்கிய சம்பளத்துடன் இந்த நேரத்தில் ஐந்து வெளிநாட்டு பயிற்சியாளர்களை நிர்வகித்து வருவதாக இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்தக் கூற்றுப்படி, ஒரு மாதத்திற்கு 60,000 அமெரிக்க டொலர்களுடன், அவர்கள் மிக்கி ஆர்தர், கிராண்ட் ப்ளவர், ஷேன் மெக்டெர்மொட், டேவிட் சாகர் மற்றும் டிம் மெக்காஸ்கில் ஆகியோரின் சம்பளத்தை செலுத்த முடிகிறது என குறிப்பிட்டுள்ளனர்.

Mon, 01/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை