நாம் அனைவருடனும் இணைந்து சமத்துவத்துடன் வாழ்வோம்

அங்கஜன் எம்.பி வாழ்த்து

பூர்வீகத் தமிழரின் பண்பாடு பிரசவிக்கும் தைமாதம் நேற்று ஆரம்பமாகியது. உழுதுண்டு வாழ்வோருக்கு உரமளிக்கும் பூமித் தாய்க்கும் சூரிய பகவானுக்கும் நன்றி செலுத்தும் திருநாள் பொங்கல் திருநாள். இத்திருநாளை தமிழர்கள் நமது கலாசார பாரம்பரியங்களுடனும் உறவுகளுடனும் இணைந்து கொண்டாடுகின்றனர்.

இவ்வாறு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பன்மைத்துவம் கொண்ட எமது நாட்டில் நமது நாகரீக பாரம்பரியங்கள் சமத்துவத்துடன் கூடிய நல்லிணக்கத்திற்கு வரமளிக்கின்றது.

நாம் இடும் விதைகளே விருட்சமாகின்றன. பயிரிடும் பலாபலன்களை நாமே அறுவடை செய்தாக வேண்டும்.

நாம் விதைத்த விதையில் இருந்து கிடைத்த அறுவடையில் பொங்கல் பொங்கி அனைவருக்கும் பகிர்ந்தளித்து சுவைத்து மகிழ்வது போன்று கலை, மொழி, சமய ரீதியாக நாம் அனைவருடனும் இணைந்து சமத்துவத்துடன் கூடிய பற்றுடன் சங்கமிப்போம்.

பொங்கலின் சுவையை எப்படி உணர்கின்றோமோ அவ்வாறே சம்பிரதாயபூர்வ நிகழ்வுகளுடன் இந் நாட்டின் சந்ததியினராக இணைந்து எமது இலங்கை நாட்டின் சுபீட்சத்திற்காக நற் பண்புகளை ஊடுகடத்துவோம்.

இந்நாட்டிற்காக வியர்வை சிந்தி உரமாக்கும் விவசாயிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்கள் அனைவரும் நன்றி செலுத்துவதற்குரியவர்களே. உலகளவில் பரந்து வாழும் தமிழர்கள் அனைவரும் ஏனையோருக்கும் எமது நன்றி தெரிவிக்கும் நாகரீகத்தின் உணர்வினை உணவின் விருந்தாக்குவோம்.

பாதுகாப்பான தேசத்தில் தொலைநோக்கான சிந்தனைகளுடன் செயற்பட்டு நாம் அனைவரும் நல் வழிகளில் பயணிக்க ஒளிமயமான எதிர்காலம் தொடரட்டும்.

வான்மழையை, செங்கதிரை, புத்தாண்டை, ஏர் உழவை, முத்தமிழைப் போற்றுகின்ற பொங்கல் பெருவிழாவில் பொங்கும் இன்பம் எங்கும் தங்குக! எங்கும் பரவுக!

Thu, 01/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை