தென்னாபிரிக்கா போராட்டம்

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்ஸுக்கு பலோ ஓன் செய்திருக்கும் தென்னாபிரிக்க அணி இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்க போராடி வருகிறது.

போர்ட் எலிசபத்தில் நடைபெற்று வரும் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 499 ஓட்டங்களை பெற்ற நிலையில் முதல் இன்னிங்ஸை இடைநிறுத்தியது.

மத்திய வரிசையில் பென் ஸ்டொக்ஸ் (120) மற்றும் ஒலி பொகே (ஆட்டமிழக்காது 135) சதம் பெற்றனர். பந்துவீச்சில் கேசவ் மஹராஜ் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 209 ஓட்டங்களுக்கே சுருண்டது. விக்கெட் காப்பாளர் டி கொக் மாத்திரம் அரைச் சதம் ஒன்றை பெற்றார். அபாரமாக பந்துவீசிய டொம் பேஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு ஸ்டுவர்ட் புரோட் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இதனால் ஆட்டத்தின் நான்காவது நாளான நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸுக்கு பலோ ஓன் செய்த தென்னாபிரிக்க அணி ஆட்டம் மழையால் தடைப்படும்போது விக்கெட் இழப்பின்றில் 15 ஓட்டங்களை பெற்றிருந்தது.

தென்னாபிரிக்க அணி இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்க மேலும் 275 ஓட்டங்களை பெற வேண்டி இருந்தது.

Mon, 01/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை