"உக்ரைன் விமானம் தவறுதலாகவே சுட்டு வீழ்த்தப்பட்டது"

"உக்ரைன் விமானம் தவறுதலாகவே சுட்டு வீழ்த்தப்பட்டது"-Iran admits they shot down Ukrainian plane unintentionally

- IRGC இராணுவ மையத்தை நோக்கி விமானம் வந்ததால் அச்சம்
- சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

ஈரான் இராணுவ தலைமையகம் அறிவிப்பு

உக்ரைன் பயணிகள் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (08) இடம்பெற்ற இவ்விபத்தில் அதில் (Boeing 737-800 PS752) பயணித்த 176 பேரும் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக இன்று (11) காலை ஈரான் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் புரட்சிகர இராணுவ படைத்  தளத்தை (IRGC military center) நோக்கியதாக உக்ரைன் விமானம் பறந்தபோது, மனித தவறின் (Humad error) காரணமாக அதை சுட்டு வீழ்த்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விபத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்பில்லை என, ஈரான் அரசு ஆரம்பத்தில் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த புதன்கிழமை ஈரான் தலைநகர் தெஹ்ரானின் கொமைனி விமான நிலையத்திலிருந்து உக்ரைன் தலைநகர் கீவ் ஊடாக கனடாவின் டொரோன்டோவை நோக்கி பயணிக்கவிருந்த குறித்த பயணிகள் விமானம், புறப்பட்டு ஓரு சில நிமிடங்களில் வீழ்ந்து நொறுங்கியது. இவ்விபத்தில் அதில் பயணித்த 176 பேருமே உயிரிழந்தனர்.

கடந்த ஜனவரி 03ஆம் திகதி, ஈராக்கின் தலைநகர் பக்தாத்திலுள்ள விமான நிலயத்திற்கு அருகில் வைத்து, அமெரிக்க ஆளில்லா விமானம் நடாத்திய தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட ஜெனரல் காசிம் சுலைமானி உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டிருந்தனர்.

இதற்கு பழிவாங்கும் வகையில் பக்தாத்திலுள்ள அமெரிக்க தளங்கள் மீது, ஈரான் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.

இத்தாக்குதல் இடம்பெற்று ஒரு மணித்தியாலத்தின் பின்னர் புறப்பட்ட உக்ரைன் விமானம் வீழ்த்தப்பட்டிருந்தது.

ஈரானின் தாக்குதலை அடுத்து, ஈரான் எல்லையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் அமெரிக்க இராணுவ விமானங்கள் அதிகரித்ததை அவதானிக்க முடிந்தாதாகவும். அவை தமது மூலோபாய  மையங்களை நோக்கியதாக காணப்பட்டதாகவும் ஈரான் இராணுவ தலைமையகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

தமது ராடார் செயற்பாட்டில் பாரிய மாற்றங்கள் காணப்பட்டதால், பாதுகாப்பை அதிகரித்ததாகவும், இவ்வாறு நிலைமைகள் காணப்பட்ட நிலையில், உக்ரைன் விமானம் புறப்பட்டுள்ளதாகவும் அது ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு  மையத்தை நோக்கியதாக பறந்ததைத் தொடர்ந்து, தாக்குதலுக்கு இலக்கானதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது.

இவ்விபத்தில் 82 ஈரான் நாட்டவர்கள், 63 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள், ஒன்பது விமான ஊழியர்கள் உள்பட 11 உக்ரைன் நாட்டவர்கள், 10 சுவீடன் நாட்டவர்கள், 04 ஆப்கானியர்கள், 03 பிரித்தானியர்கள், 03 ஜேர்மன் நாட்டவர்கள் உள்ளிட்ட 176 பேர் மரணமடைந்தனர்.

குறித்த விமானம் ஏவுகணை தாக்குதலுக்குட்படுத்துவது தொடர்பில் நியூயோர்க டைம்ஸ் இணையத்தளம் நேற்று முன்தினம் (09)காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sat, 01/11/2020 - 11:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை