ஐ.தே.மு - கூட்டமைப்பு கூட்டாட்சியில் யாழ்ப்பாணத்திற்கு அநீதி

விசாரணைக்கு அமைச்சரவையில் தீர்மானம் 

நல்லாட்சி என்று சொல்லப்பட்ட கடந்த ஆட்சி காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்ற சென்னை விமான நிலையத்திற்கான விமானப் போக்குவரத்திற்காக பயணிகளிடம் இருந்து பெருந்தொகையான விமான நிலைய வரி அறவிடப்படுகின்றமை தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

2020ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் (02.01.2020) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிலையில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்படி விடயம் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. 

அமைச்சரவை கூட்டத்தில், கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு பயணங்களை மேற்கொள்வோருக்கான விமான நிலைய வரி ஆறாயிரம் ரூபாயாக இருக்கின்ற நிலையில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகளிடம் இருந்து பன்னிராயிரம் ரூபாய் அறிவிடப்படுகின்றமையை யாழ்ப்பாண மக்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற ஓரவஞ்சனையாகவே நோக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சுட்டிக் காட்டப்பட்டது.  

மேலும், அடிப்படை வசதிகள்கூட முழுமையாக நிறைவு செய்யப்படாத நிலையில் கடந்த ஆட்சியாளர்களினால் தேர்தலை நோக்கமாக கொண்டு யாழ்ப்பாண விமான நிலையம் திறந்து வைக்கப்பட்ட நிலையில், கட்டுநாயக்கா விமான நிலையத்துடன் ஒப்பிடுகின்றபோது குறைந்த பரப்பு தூரத்தைக் கொண்ட சென்னைக்கான பயணிகளிடம் இருந்து விமான நிலைய வரி இரண்டு மடங்காக அறவிடப்படுவதற்கு ஐ.தே.மு – தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்த கூட்டரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு எதிரான இந்த தீர்மானமானது ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் தெரிவித்தார். 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையின் நியாயத்தினை ஏற்றுக் கொண்ட அமைச்சரவை குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏகமனதாக தீர்மானித்தது. 

அதேபோன்று, ஜேர்மனி அரசாங்கத்தின் அனுசரணையில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட ஜேர்மன் ரெக் எனப்படும் ஜேர்மனி தொழிற்பயிற்சி நிறுவனத்தில் நிலவிவருகின்ற குறைபாடுகள் தொடர்பான விடயங்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று முன்தினம் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அது தொடர்பாகவும் உரிய விசாரணைகளை மேற்கொண்டு குறித்த நிறுவனம் சிறப்பாக செயற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Sat, 01/04/2020 - 11:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை