கடற்றொழில் சார் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் பெற்றுத்தரப்படும்

மன்னார் மாவட்டத்தில் காணப்படும் கடற்றொழில் சார் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் பெற்றுத்தரப்படும் என்றும் கடற்றொழிலை நம்பி வாழும் மக்களது வாழ்வாதாரத்துடன் அவர்களது பொருளாதாரமும் சிறந்தமுறையில் முன்னேற்றப்படும் என கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அமைச்சர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கடற்றொழில் சார் அமைப்புகளின் பிரச்சினைகள் மற்றும் மக்களது தேவைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்தார்.

இதன்போது மக்களது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் குறிப்பாக கடற்றொழிலை நம்பி வாழும் மக்கள் அதிகளவான பாகுபாடுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்திருந்ததை அவர்கள் கூறும் கருத்துக்களிலிருந்து அவதானிக்க முடிகின்றது.

ஆனாலும் தேசிய அமைச்சுப் பொறுப்பை நான் வகிப்பதனால் அனைத்து மக்களையும் ஒன்றாகவே பார்க்கின்றேன். எமது செயற்பாடுகளில் பாகுபாடுகளோ அல்லது பழிவாங்கல்களோ இருக்கப் போவதில்லை.

மக்கள் எதிர்கொள்ளும் வறுமை நிலை இல்லதொழிக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்காக எமது அமைச்சினூடாக மேற்கொள்ளக் கூடிய அனைத்து திட்டங்களையும் முன்னெடுக்க தயாராக இருப்பதுடன் சிறு தொழில் முயற்சிகளை மேற்கொள்ள பல திட்டங்களை உருவாக்கவுமுள்ளேன். இதற்கு முதலீடுகளை மேற்கொள்ள முதலீட்டாளர் ளையும் அழைக்கின்றேன்.

அந்தவகையில் தலைமன்னார், கீளியன் குடியிருப்பு, பேசாலை, தாழ்வுப்பாடு, எருக்கலம் பிட்டி போன்ற பகுதிகளில் கடற்றொழிலை நம்பி வாழும் மக்களுக்கு மட்டுமல்லாது ஏனைய மக்களும் பலன்களைப் பெறக்கூடிய வகையில் நன்னீர் மீன் வளர்ப்பு, கடல் நீர் உயிரின வளர்ப்பு போன்றவற்றுடன் கடலுணவு உற்பத்தி போன்றவற்றை உருவாக்கவும் அவற்றை ஏற்றுமதி செய்து புதிய தொழில்துறைகளை இனங்கண்டு இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுப்பதற்கான நிலைகளை இனங்கண்டு தருமாறும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.(ஸ)

 மன்னார் குறூப் நிருபர்

 

Tue, 01/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை