முல்லைத்தீவு, மல்லாவி பிரதான வீதியில் வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (11) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் கணவன், மனைவி ஆகிய இருவர் பயணித்துள்ள நிலையில், குறித்த மோட்டார் சைக்கிள் வட்டுவாகல் பாலத்துக்கு அருகிலுள்ள வளைவில் கடற்படையினரின் வாகனத்துடன் மோதியுள்ளது.
இதன்போது அதில் பயணித்த, கணவர் உயிரிழந்த நிலையில் மனைவி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வரும் மல்லாவி, துணுக்காய், ஒட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த 28வயதான அமிர்தலிங்கம் ஜீவன்
எனவும் தபால் திணைக்களத்தில் கடமையாற்றி வரும் 26 வயதான அவரது மனைவியான கேஜிவன் வினூஜா முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, முல்லைத்தீவிலிருந்து மல்லாவி பகுதிக்கு சென்ற கடற்படையினரின் வாகனமும் மல்லாவியில் இருந்து முல்லைத்தீவுக்கு வருகை தந்திருந்த மோட்டார் சைக்கிளும் வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள வளைவில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது முல்லைதீவு வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம், விஜயரத்தினம் சரவணன்)
from tkn