யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
புதிய அரசு பதவியேற்றதன் பின்னர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய தினம் (12) தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் குருநகர் பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை 5.30 மணி தொடக்கம் காலை 6.00 மணி வரை இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நடவடிக்கையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை நேற்றைய தினம் (11) சனிக்கிழமை தெல்லிப்பளை பகுதியிலும் இராணுவத்தினரும் பொலிஸார் சேர்ந்து சுற்றிவளைப்பு தேடுதல்களை முன்னெடுத்திருந்தனர். அதிலும் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)
from tkn