ஜனாதிபதித் தேர்தலில் எடுத்த முடிவையே பொதுத்தேர்தலிலும் மக்கள் எடுக்க வேண்டும்

ஜனாதிபதித் தேர்தலின்போது மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து அமோக வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததுபோன்று, எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் பெரும்பான்மை ஆதரவுடன் பலமான அரசாங்கத்தை அமைக்கும் அதிகாரத்தை, மக்கள் வழங்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மருதானையிலுள்ள மத்திய கொழும்பு காரியாலயத்தில் புது வருட ஒன்று கூடல் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.நேற்று முன் தினம் (01) இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய அவர்:

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் எடுத்த அரசியல் ரீதியிலான தீர்மானத்தை, பொதுத் தேர்தலிலும் எடுக்க வேண்டும்.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் மக்களுக்கு நாம் செய்யவேண்டிய பணிகள் நிறையவே உள்ளன. அந்தப்பணிகளில் அரச சேவையாளர்களும் கூட்டுப்பொறுப்புடன் மக்களுடன் நெருக்கமாக இணைந்து சேவைகளை வழங்கத் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதார அபிவிருத்தியையும் எமது இலக்கை நோக்கிய பயணத்தையும் தொடர முடியும். அத்துடன், பிரமுகர்கள், மதத்தலைவர்களின் ஆலோசனைகள், கருத்துக்களையும் மதித்து பணிகளை முன்னெடுப்பது அவசியம்.

கொழும்பு மாவட்டம், பல்லின சமூகங்கள் வாழ்ந்து வரும் மாவட்டமாகும். எனவே, இம்மாவட்டம் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். கொழும்பு மாவட்ட மக்கள் நல்லவர்கள். இவர்கள் இனவாதத்துக்கும் துவேஷத்துக்கும் ஒருபோதும் சோரம் போவதில்லை.ஆனால், சில அரசியல் கட்சிகள் இவர்களுக்கு ஏதாவது ஆசை காட்டி, வழி கெடுக்க முனைகின்றன. இதற்காக எமது தன்னம்பிக்கையையும் சுய மரியாதையையும் இழந்துவிடக் கூடாது. நாம் எப்போதும் எம்மைப் பாதுகாத்துக் கொண்டு அடுத்தவர்களையும் மதித்து நடக்க வேண்டும்.

பிறந்திருக்கும் புத்தாண்டிலிருந்து நாட்டுக்காகவும், பொது மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற அரசியல்வாதிகள் என்ற ரீதியில் நாம் கடமைப்பட்டுள்ளோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷ, பிரதமர் மஹிந்த ராஜபஷ ஆகியோரின் தலைமையின் கீழ், தற்போது நாம் சிறந்த நிர்வாகம் ஒன்றைப் பெற்றுள்ளோம். இந்த நிர்வாகத்தின் கீழ், மக்களாகிய நீங்கள் தொடர்ந்தும் நிறையவே சேவைகளையும் தேவைகளையும் பெறுவீர்கள். இதற்காக எதிர்வரும் பொதுத்தேர்தலில் பாரிய பங்களிப்பு, ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

குளிரூட்டிய அறைகளுக்குள் இருந்துகொண்டு நாம் ஒருபோதும் அரசியல் செய்யமாட்டோம். மக்களுடன் மக்களாக இருந்துகொண்டு அரசியல் செய்வதே எமது பணியாகும். எதிர்வரும் பொதுத்தேர்தலுக்குப் பின்பு, கொழும்பு வாழ் மக்களின் மேலும் பல தேவைகளை நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கெளரவ அதிதியாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, அதிதிகளாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள், சமயப் பெரியார்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

 

Fri, 01/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை