ஆரம்பகட்ட சோதனையில் முடிவு; முழு அறிக்கை வந்த பின்னரே தீர்மானிக்கலாம்
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில், கொலன்னாவ, தொற்று நோய் மருத்துவமனையில் (IDH) அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என ஆரம்பகட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
தொற்றுநோயியல் பிரிவின் சிரேஷ்ட தொற்றுநோயியல் நிபுணர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
கொரானா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் சீன பெண் உள்ளிட்ட இரு பெண்கள் நேற்றையதினம் (25) கொலன்னாவ, IDH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு சீன பெண் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஆணொருவர் என மொத்தமாக நால்வர் இச்சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களிடம் குறித்த வைரஸின் அறிகுறிகள் தென்பட்டதாகவும் குறித்த நால்வரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் உடல் நலன் தேறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த நால்வரினதும் இரத்த மாதிரிகள் பொரளை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட சோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
ஆயினும் முழு அறிக்கை வரும் வரை அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உறுதியாக கூறமுடியாது என, தொற்றுநோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பான முழு அறிக்கை விரைவில் கிடைக்கப் பெறும் என எதிர்பார்ப்பதாகவும், இரு நாட்களுக்குள் அதனை பெறலாம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவின் வூஹான் நகரில் பதிவானது. அதனைத் தொடர்ந்து பல பல நகரிற்கும் பரவிய இவ்வைரஸ் நாடு கடந்து சீனாலிருந்து வந்தவர்களால், அமெரிக்கா, பிரான்ஸ், நேபாளம், தாய்லாந்து, ஜப்பான், வட கொரியா, தாய்வான், சிங்கப்பூர், வியட்னாம், மலேசியா, அவுஸ்திரேலியாவிற்கும் பரவியுள்ளது.
இவ்வைரஸ் இந்தியாவிற்கு தற்போது பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வைரஸ் தொற்றினால் சீனாவில் இது வரை 56 பேர் மரணமடைந்துள்ளதோடு, தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,975 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய,
- கைகளை சவர்க்காரம் பயன்படுத்தி நீரினால் கழுவுதல் அல்லது மதுசாரம் கலந்த கைகழுவும் திரவங்கள் மூலம் கழுவுதல்.
- இருமல் மற்றும் தும்மலின்போது ரிசு அல்லது கைக்குட்டையினால் அல்லது முழங்கையை மடித்து மூக்கை மறைத்தல்.
- தடுமல் அல்லது காய்ச்சல் உள்ளவர்களுக்கு மிக அருகில் தொடர்புறுவதை தவிர்த்தல்.
- இறைச்சிகள், முட்டைகளை நன்றாக சமைத்தல்
- பண்ணை விலங்குகள் அல்லது காட்டு விலங்குகளை திரையின்றி தொடுவதை தவிர்த்தல்.
from tkn