மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி

சிங்கர் கிண்ண 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் – III பாடசாலைகள் இடையே நடாத்தும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் வியாழக்கிழமை (2) நிறைவடைந்த போட்டியொன்றில், அம்பாறை டி.எஸ். சேனநாயக்க கல்லூரி அணிக்கு எதிராக மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்துள்ளது.

புத்தாண்டின் முதல் நாளான கடந்த புதன்கிழமை (1) மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி மைதானத்தில் இவ்விரு கல்லூரிகளுக்கும் இடையிலான போட்டி ஆரம்பமானது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற புனித மைக்கல் கல்லூரி அணித்தலைவர் நிரேஸ்வர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை அம்பாறை வீரர்களுக்கு வழங்கினார். அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய அம்பாறை டி.எஸ். சேனநாயக்க கல்லூரி அணியானது மட்டக்களப்பு வீரர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் தமது முதல் இன்னிங்ஸின் அனைத்து விக்கெட்டுக்களையும் வெறும் 98 ஓட்டங்களுக்கு பறிகொடுத்தது. அம்பாறை அணியின் துடுப்பாட்டம் சார்பில் டி.ஏ.கே. ஆதித்யா மாத்திரமே 20 ஓட்டங்களைக் கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், புனித மைக்கல் கல்லூரியின் பந்துவீச்சு சார்பில் எஸ். சுசீகரா 3 விக்கெட்டுக்களையும், எஸ். ஜோய் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.

பின்னர், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய புனித மைக்கல் கல்லூரி அணிக்கு மத்திய வரிசையில் களம் வந்த எஸ். ருபி கரண் அதிரடியான முறையில் சதம் ஒன்றினை விளாசினார். அவரின் சத உதவியோடு 36 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த புனித மைக்கல் கல்லூரி வீரர்கள் தமது முதல் இன்னிங்ஸில் 210 ஓட்டங்களைக் குவித்தனர்.

அதிரடியாக சதம் பெற்ற ருபி கரண் வெறும் 64 பந்துகளுக்கு 135 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில், டி.எஸ். சேனநாயக்க அணியின் பந்துவீச்சு சார்பாக சமிந்து 3 விக்கெட்டுக்கள் சாய்க்க கவிஷ்க 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

பின்னர், 112 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பம் செய்த அம்பாறை டி.எஸ். சேனநாயக்க கல்லூரி தமது இரண்டாம் இன்னிங்ஸில் 26 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 123 ஓட்டங்கள் குவித்துக் காணப்பட்டிருந்த போது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. இதனால், ஆட்டம் சமநிலையில் நிறைவடைய முதல் இன்னிங்ஸ் வெற்றியை புனித மைக்கல் கல்லூரி அணி தமதாக்கியது.

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் சார்பில் டி.ஏ.கே. ஆதித்யா 36 ஓட்டங்கள் குவித்திருக்க, புனித மைக்கல் கல்லூரி அணியின் பந்துவீச்சிற்காக எஸ். துஜித்திரம் 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது,

Sat, 01/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை