பேய் வீடுகள் போல் காட்சியளிக்கும் மீன்பிடித் துறைமுக கட்டடங்கள்

கடந்த காலங்களில் வழிநடத்தல் இல்லாமையே காரணம்

மீன்பிடித் துறைமுகங்களில் அலுவலகக் கட்டடங்கள் பெரும்பாலானவை பராமரிப்பின்றி பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன. தற்போதைய அரசாங்கத்திலும் இவ்வாறான நிலை தொடர்வதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

துறைமுகக் கூட்டுத்தாபனத்தினால் திட்டமிடப்பட்டுள்ள மீனவர் சமூக பெண்களுக்கான சமூக அபிவிருத்தி திட்டத்தை உடனடியாக நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கியதுடன் இத் திட்ட வரைபின் இறுதி வடிவத்தை தனக்கு வழங்குமாறும் குறிப்பிட்டார்.

மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையிலான சந்திப்பு  நேற்று முன்தினம் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,

கடந்த காலத்தில் சரியான தலைமைகளின் வழிநடத்தல் இல்லாமையினால் மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம் தற்போது மோசமான நிலையில் காணப்படுகிறது.

ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்குமாயின் மீண்டும் சிறந்த நிலைக்கு கொண்டு வரமுடியும். அனைத்து ஊழியர்களுக்கும் அந்த பயன் கிடைப்பதற்கு தேவையான அனுமதியை அமைச்சரவையில் பெற்றுத்தர முடியும்.

துறைமுகங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களிடமும் நான் கலந்துரையாடினேன். அவர்கள் அதற்கு சாதகமான சமிஞ்ஞைகளை வெளிப்படுத்தினர்.

வருடந்தோறும் எமக்கு அரசாங்கத்தினால் ஒதுக்கப்படுகின்ற நிதி போதியளவு இல்லாமல் இருப்பதால் திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் இருப்பதாக அதிகாரிகள், தெரிவித்தனர்.

பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் நீர்மூழ்கி பணியாளர்களும் இல்லாமையினால் துறைமுகங்களில் தேவையற்ற அசௌகரியங்கள் ஏற்படுகின்றன எனவும் சுட்டிக்காட்டினர்.

இவ் வெற்றிடங்கள் தொடர்பான கோரிக்கையை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும் அது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடி ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பதற்கு தேவையான அனுமதிகளை உடனடியாக பெறுத்தருவதாகவும் அமைச்சர் டக்களஸ் குறிப்பிட்டார்.

 

 

Sat, 01/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை