தென்னாபிரிக்க ஒருநாள் அணியின் தலைவராக குயின்டன் டி கொக்

இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான தென்னாபிரிக்க அணியின் புதிய தலைவராக குயின்டன் டி கொக் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்க மண்ணுக்கு இருதரப்பு கிரிக்கெட் தொடருக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ரி 20 சர்வதேச ஆகிய மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது.

சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகின்ற நிலையில் தற்போது 3 போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற ரீதியில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்து நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான தென்னாபிரிக்க அணியின் 15 பேர் கொண்ட அணியை (21) அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க ஒருநாள் அணியின் வழமையான தலைவராக இதுவரையில் பப் டு ப்ளெஸிஸ் செயற்பட்டு வருகின்றார். இந்நிலையில் கடந்த கால முடிவுகளின் அடிப்படையில் டு ப்ளெஸிஸ் தலைமையில் தென்னாபிரிக்க அணி தொடர்ச்சியான தோல்விகளை கண்டு வருகிறது. இந்நிலையில் அடுத்து நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான குழாமிலிருந்து பப் டு ப்ளெஸிசுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையிலேயே புதிய அணித்தலைவராக குயின்டன் டி கொக் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வெளியிடப்பட்டுள்ள குழாமில் தென்னாபிரிக்க தேர்வுக்குழுவானது சொந்த மண்ணில் தொடர் நடைபெறவுள்ள காரணத்தினால் ஐந்து புதுமுக வீரர்களை ஓரே தடவையில் குழாத்தில் இணைத்துள்ளது. கடந்த வருடம் (2019) பெப்ரவரியில் பாகிஸ்தான் அணியுடன் ரி 20 சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்ட வேகப்பந்துவீச்சாளர் லுதோ சிபம்லா முதல் தடவையாக ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இரு ரி 20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள வீரர்களான சுழற்பந்துவீச்சாளர் பிஜோர்ன் போர்சியுன் மற்றும் துடுப்பாட்ட வீரர் ஜெனீமன் மாலன் ஆகியோருடன் சர்வதேச அறிமுகம் பெறாத விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் கெயில் வெர்ரெய்ன் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் சிசாண்டா மகாலா ஆகிய ஐந்து வீரர்கள் இவ்வாறு முதல் முறையாக ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

2018ஆம் ஆண்டு இந்திய அணியுடன் ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெற்று கடந்த வருடம் (2019) நடைபெற்ற ஐ.சி.சி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இடைநடுவில் விலகிய வேகப்பந்துவீச்சாளர் லுங்கி ங்கிடி இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் தென்னாபிரிக்காவில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மஸன்ஷி சுப்பர் லீக் தொடரின் போது உபாதைக்குள்ளானதில் டெஸ்ட் தொடருக்கான குழாமிலிருந்து நீக்கப்பட்டார்.

ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெறும் அடிப்படையில் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ள சிசாண்டா மகாலா, சுழற்பந்துவீச்சாளர் தப்ரிஸ் ஷம்ஸி மற்றும் துடுப்பாட்ட வீரர் ஜொன் ஜொன் ஸ்மட்ஸ் ஆகியோர் உடற்தகுதி பரிசோதனையில் சித்தியடைந்ததன் மூலம் தென்னாபிரிக்க ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

தென்னாபிரிக்க ஒருநாள் அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குயின்டன் டி கொக் அண்மையில் தென்னாபிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வேளையில் தென்னாபிரிக்க ரி 20 அணிக்கு தலைமை தாங்கினார். இதில் குறித்த தொடர் 1--1 என்ற அடிப்படையில் சமநிலையில் நிறைவுக்குவந்தமை குறிப்பிடத்தக்கது.

Thu, 01/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை