வடக்கு, கிழக்கு மக்களை கூட்டமைப்பும் மு.காவும் ஏமாற்றி விட்டன

வடக்கு, கிழக்கில் வாழும் மக்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கிணற்றுத் தவளைகளாக எண்ணுகின்றன. மக்களை அந்தக் கிணற்றை விட்டு வெளியேறாதவாறு தடுக்கின்றனர்.

இதில் அரச பதவி என்றால் ரவூப் ஹக்கீம் மார்க்கமே மாறுவார் என தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் தெரிவித்தார். மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஆறாவது ஆண்டு நிறைவு விழாவும் கலைச்சுடர் ஷக்காப் மௌலானா ஞாபகார்த்த விருது வழங்கும் நிகழ்வும் கடந்த சனிக்கிழமை சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

2010 சிறுபான்மை மக்களின் ஆதரவு இல்லாமல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்ததை நாம் மறந்தோம். 2005ம் ஆண்டு வாக்களிக்க விடாமல் செய்துவிட்டு பின் கதவால் சென்று பதவிகளைப் பெற்ற தலைவர்கள் தற்போது இருக்கிறார்கள். அந்தத் தலைவர்கள் 2015ஆம் ஆண்டு இங்கு வந்து மைத்திரிபால சிறிசேன எங்களுடைய தலைவர் என்றார்கள் .அது மட்டும் நடந்தது விட்டது. அது சிறுபான்மை மக்களால் நடக்கவில்லை. வழக்கமாக சிங்கள மக்கள் அளிக்கின்ற வாக்குகள் குறைந்துள்ளமையினால் இந்த விடயம் நடந்துள்ளது.அதுமட்டுமல்ல 2019 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் மிகப் பெரும்பான்மையாக கோட்டாபய ராஜபக்ஷவையும் மகிந்த ராஜபக்ஷவையும் ஆதரித்து இருக்கின்ற அந்த சந்தர்ப்பத்தில், 2015ஆம் ஆண்டை போன்றே மஹிந்த ராஜபக்ஷ தோற்று விடுவார் என்று ஒரு நிலைமையை உருவாக்கியவர்கள் இந்த தலைவர்கள்.

அதேபோன்று 2019ஆம் ஆண்டு வந்து இதே கதையை உருவாக்கினார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வட, கிழக்கில் வாழும் மக்களை கிணற்றுத் தவளைகளாக எண்ணுகின்றனர். மக்களை அந்தக் கிணற்றை விட்டு வெளியேற முடியாமல் தடுக்கின்றனர். இது தவிர கல்முனை பிரதேச செயலக விடயத்தையும் சாய்ந்தமருது பிரதேச சபை விடயத்தையும் மஹிந்த ராஜபக்ஷவும் பஷில் ராஜபக்ஷ இங்கு மக்களுக்கு தீர்த்துக் கொடுப்பதற்கான தெளிவுகளை வழங்கிய பின்னரும் சமூகத்தை பற்றி யோசிக்கும் இது தலைவர்கள் இங்கு வந்து மக்களை குழப்பி அன்னத்துக்கு வாக்களிக்க வைத்தனர். கடைசியிலே அந்த வாக்கு செல்லுபடியற்ற வாக்குகளாக மாற்றிவிட்டனர். தற்போது செருப்பு அணியாத தம்பி சஜித் பிரேமதாசவை காட்டி வாக்கு கேட்டனர். ஆனால் அவர் தேர்தலில் தோற்ற பின்னர் அஞ்ஞாதவாசம் சென்றுவிட்டார். இப்போது மக்கள் எந்தவொரு இன பிரச்சினையும் இன்றி நிம்மதியாக வாழ்கின்றனர். அவர்கள் நிம்மதியாக வாழ்வது பற்றி யோசிக்காத முஸ்லிம் இரு தலைவர்களும் மீண்டும் சஜித்தை பிரதமராகி தீருவோம் என்றால் இது உண்மையாக மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமா? தீர்த்தக் கரைகளில் கூட்டங்கள் வைப்பதுபோல இன்று ஒவ்வொரு ஊர்களிலும் வந்து சஜித் பிரேமதாஸவை பிரதமராக்க போகிறோம் என்று கூறுகிறார்கள். இதை இந்தப் பிரதேசத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவர் இருந்தார் என்றால் அவர் இந்த பிரதேசத்தில் வாழத் தகுதியற்றவர் என்று நாம் கருதலாம்.

இந்த வட, கிழக்கு பிராந்தியத்தில் வாழும் மக்களை இவர்கள் மந்தைகளாக பார்க்கின்ற பார்வை எனக்கு வேதனை அளிக்கிறது. இவ்வாறான மக்களிடம் பொய்களைச் சொல்லி வாக்குகளை பெறுகிறார்கள் என்றால் அவ்வாறான தலைவர்களை நாம் ஏன் நிராகரிக்க கூடாது என்றார்.

 

Mon, 01/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை