நோய்த் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்வதற்காக முகக்கவசம் அணிபவர்கள் அதனை முறைப்படி அணியாவிட்டால், எவ்வித பயனையும் அடைய முடியாதென கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதம தாதியான, புஸ்பா ரம்யானி டி சொய்சா நேற்றுத் தெரிவித்தார். இது பற்றி அவர் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளதாவது:
# முகக்கவசத்தை அணிவதற்கு முன்னர் கைகளை நன்கு சவர்க்காரம் இட்டு கழுவுதல் வேண்டும்.
# முகக் கவசத்தின் நீல நிறம் வெளிப்புறம் தெரியும்படியாக அணிதல்.
# கம்பி போன்று இருக்கும் பகுதி கண்களுக்கு கீழே மூக்கின் மேற்புறம் இருக்குமாறு அழுத்தமாக வைத்து, மேலேயுள்ள பட்டிகளை காதுக்கு மேற்புறமாக கொண்டு இறுக்கமாக கட்டுதல்.
# கீழேயுள்ள பட்டிகளை காதின் கீழ்புறமாக கொண்டு இறுக்கமாக கட்டல்.
# முகக்கவசத்தின் கீழ் பகுதியை நாடி வரை இழுத்து மூடி விடல்.
# கட்டும் பட்டிகளுக்கு பதிலாக காதுகளில் மாட்டக்கூடிய வளையங்கள் இருக்குமாயின் அதே பாணியில் அணிந்து இரண்டு பக்க காதுகளிலும் அதனை மாட்டிக்கொள்ளல்.
# கண்களுக்கு கீழிருந்து மூக்கு முதல் நாடி வரை முகத்தின் அனைத்து பாகங்களும் முகக் கவசத்துக்குள் உள்ளடக்கப்படல்.
# அதன் பின்னர் எச்சந்தர்ப்பத்திலும் கைகளை முகக்கவசத்தின் மீது வைப்பதைத் தவிர்த்தல்.
# பேசும்போது முகக்கவசத்தை அடிக்கடி கீழே இழுத்து விடுவதால் எவ்வித பிரயோசனமும் இல்லை.
# பயன்பாடு முடிவடையும் வரை அதே முகக் கவசத்துடனேயே இருக்க வேண்டும்.
# பயன்பாடு முடிவடைந்த பின்னர் முகக்கவசத்தின் உட்பக்கம் அதாவது மூக்கு மற்றும் வாயை மூடியிருந்த பகுதி வெளியே தெரியாத வகையிலும் கைகளில் படாதவாறும் அதனை நேரடியாக கழிவுக்கூடைக்குள் இடவும்.
# இறுதியாக கைகளை நுண்ணுயிர்க்கொல்லி அல்லது சவர்க்காரம் இட்டு நன்கு கழுவிக் கொள்ளவும்.
# ஒரு முகக்கவசத்தை சுமார் எட்டு மணித்தியாலங்களுக்கு பயன்படுத்தலாம்.
# ஒரு தடவை பயன்படுத்திய முகக்கவசத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது.
லக்ஷ்மி பரசுராமன்
from tkn