வரக்காபொலையில் கோர விபத்து

4 விமான படையினர் பலி

கனரக வாகனத்துடன் முச்சக்கர வண்டிநேருக்குநேர் மோதி விபத்து

வராக்காபொலை, தும்மலதெனிய பகுதியில் நேற்று அதிகாலை முச்சக்கரவண்டியொன்றும் கொள்கலன் ஏற்றிச்செல்லும் கனரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு விமானப் படை வீரர்கள் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று அதிகாலை 4.00 மணியளவில் கொழும்பு - கண்டி பிரதான வீதியின் வராக்காபொலை, தும்மலதெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாத்தளையில் மரணச்சடங்கொன்றில் கலந்து கொண்டுவிட்டு இரத்மலானை விமானப் படை முகாம் நோக்கி முச்சக்கரவண்டியில் பயணித்து கொண்டிருந்த 4 விமானப் படை வீரர்கள் எதிரே கொழும்பிலிருந்து பொலன்னறுவை நோக்கிச் சென்று கொண்டிருந்த கனரக கொள்கலன் வண்டியொன்றுடன் நேருக்குநேர் மோதி இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்த 4 விமானப் படை வீரர்களும் ஸ்தலத்தில் பலியானதுடன் முச்சக்கர வண்டி உருக்குலைந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் கொஸ்கம, அம்பாரை, கஹடகஸ்திகிலிய, கேகாலை, பல்லபான ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 வயதுக்கும் 38 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என வரக்காபொலை பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர்களின் சடலங்கள் வரக்காபொலை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்தன. வரக்காபொலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வரக்காபொலை தினகரன் நிருபர்

Wed, 01/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை