இலங்கை அகதிகள் விண்ணப்பித்தால் குடியுரிமை வழங்க அரசு தயார்

இலங்கை அகதிகளுக்கு முழுப் பாதுகாப்பையும் பிரதமர் நரேந்திர மோடி அரசு வழங்கும். இலங்கை அகதிகள் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க அரசு தயாராக உள்ளதென பா.ஜ.க தேசிய பொதுச் செயலர் ராம். மாதவ் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றியது. இச் சட்டம் நிறைவேறியது முதல் இன்று வரை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இச் சட்டத்திற்கு ஆதரவளித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் பல இடங்களில் பேரணிகள் நடைபெற்று வருகிறன.

இந் நிலையில், திருச்சியில் பா.ஜ.க சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பேரணி நடைபெற்றது. பேரணி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தேசிய பொதுச் செயலர் ராம்.மாதவ் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் பேசியதாவது,

ஆயிரக்கணக்கான தமிழக மக்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள். சில தலைவர்களும், சில மக்களும் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி தெரியாமலே எதிர்த்து வருகிறனர். இந்த சட்டம், இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ, கிறிஸ்தவர்களுக்கோ எதிரானதல்ல. மத துன்புறுத்தலுக்கு உள்ளாகி 50 ஆண்டுகளுக்கு முன் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு குடியுரிமை தருவது நமது கடமை. இலங்கை அகதிகளுக்கு முழுப் பாதுகாப்பை பிரதமர் நரேந்திர மோடி அரசு வழங்கும். இலங்கை அகதிகள் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க அரசு தயாராக உள்ளது. குடியுரிமை கொடுப்பதில் மத ரீதியிலான பிரிவினை கிடையாது. மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட அகதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நாடாக இந்தியா இருக்கும் என்றார்.

 

Sat, 01/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை