சிவாஜிலிங்கத்துக்கு பிடியாணை; முல்லைத்தீவு நீதிமன்று கட்டளை

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பிடியாணை உத்தரவு பிறப்பித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. மேலும் குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மீது முல்லைத்தீவு பொலிஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், 2018பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சென்ற அவர் பிணையில் விடுதலையாகியிருந்தார்.

இதேவேளை வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் முன் பிணைகோரிய வழக்கினை ஒத்திவைத்து பின்னர் நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக முன்னிலையாகி பிணையில் வெளிவந்தார். இந் நிலையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இவ் வழக்கு நேற்று முன்தினமும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந் நிலையில் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் வடமாகணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நீதிமன்றத்திற்கு சமூகம் தராத நிலையில் அவருக்கு மன்று பிடியாணை பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

மாங்குளம் குறூப் நிருபர்

Wed, 01/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை