தம்மீதான சேறுகளை கழுவிக்கொள்ளும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உரையாற்றியுள்ள போதிலும் அவரின் உண்மை முகம் நாட்டுக்கு ஏற்கனவே அம்பலமாகிவிட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட எமது அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர் ஒருவரின் குரல் பதிவையாவது வெளியிடுமாறு பகிரங்கமாக கோருகின்றோமென இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த 'அளுத்கமகே தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
பிரதமர், அமைச்சர்கள், அமைச்சர்களின் மனைவிகள் மற்றும் மகள்மாரின் குரல் பதிவுகள் தம்மிடமுள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த குரல் பதிவுகள் அனைத்தையும் சபைக்கு ஆற்றுப்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.
ஆனால், இதுவரை எந்தவொரு குரல்பதிவையும் அவர் சபைக்கு ஆற்றுப்படுத்தவில்லை.
முடிந்தால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், அவர்களது மனைவிமார் மற்றும் மகள்மாரின் குரல் பதிவுகளை வெளியிடுமாறு கோருகின்றோம். மோசடிகள் தொடர்பிலான மற்றும் வழக்குகளுக்காக டீல் போட்டதாக கூறப்படும் குரல் பதிவுகளை வெளியிடுமாறு ரஞ்சன் ராமநாயக்கவிடம் பகிரங்கமாக கோருகின்றோம் என்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
from tkn