7ஆவது சட்டத்தரணிகள் உலகக் கிண்ணம்: இலங்கைக்கு இரண்டாமிடம்

சட்டத்தரணிகளுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் 9 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவிய இலங்கை சட்டத்தரணிகள் கிரிக்கெட் அணி இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

உலக சட்டத்தரணிகள் கிரிக்கெட் சங்கத்தினால் 7ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட சட்டத்தரணிகளுக்கான உலகக் கிண்ண கிரிககெட் தொடர் நியூசிலாந்தின் ஹமில்டனில் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகியது.

இம்முறை போட்டித் தொடரில் இலங்கை, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன.

இதன்படி, ரொபின் ரவுன்ட் முறையில் நடைபெற்ற இம்முறை போட்டித் தொடரின் இறுதிப் போட்டி கடந்த 9ஆம் திகதி ஹெமில்டனின் ஸ்னெடன் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் யொஹான் ஜினசேன தலைமையிலான இலங்கை சட்டத்தரணிகள் அணி அவுஸ்திரேலிய சட்டத்தரணிகள் அணியை எதிர்கொண்டது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை சட்டத்தரணிகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ஓட்டங்களை எடுத்தது.

பின்னர் 220 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய சட்டத்தரணிகள் அணி 32.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு வெற்றியிலக்கை அடைந்தது. இதன்படி, 9 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி சம்பியனாகத் தெரிவாகியது.

இம்முறை போட்டிகளில் இலங்கை சட்டத்தரணிகள் அணி, லீக் சுற்றில் மேற்கிந்திய தீவுகளை 9 விக்கெட்டுக்களாலும், இங்கிலாந்தை 152 ஓட்டங்களாலும், பங்களாதேஷை 7 விக்கெட்டுக்களாலும், நியூஸிலாந்தை 170 ஓட்டங்களாலும் வீழ்த்தியது.

பாகிஸ்தானுடனான போட்டியில் 27 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடன் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி 3ஆவது தடவையாக சட்டத்தரணிகள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

முன்னதாக, இலங்கை அணி 2 தடவைகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகினாலும், இரண்டாவது இடத்தை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது.

Fri, 01/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை