புர்கினா பாசோவின் சந்தை ஒன்றில் ஆயுதக் குழு ஒன்று நடத்திய தாக்குதலில் 36 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அலபு என்ற கிராமத்தில் உள்ள சந்தைக்குள் கடந்த திங்கட்கிழமை ஊடுருவிய ஆயுக் குழுவைச் சேர்தவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பதோடு அங்கிருக்கும் கட்டுமானங்களை தீக்கிரையாக்கியதாக அரசாங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலை தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறி இருப்பதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
புர்கினா பாசோவில் அல் கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசு குழுவுடன் தொடர்புபட்ட இஸ்லாமியவாதக் குழுக்கள் பொது மக்கள் மற்றும் இராணுவத்தின் மீது அண்மைக் காலத்தில் தாக்குதல்களை அதிகரித்துள்ளது. கடந்த நவம்பரில் வாகனத் தொடரணி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 40 பேர் கொல்லப்பட்டனர். எனினும் இந்தத் தாக்குதலுக்கு எந்தத் தரப்பு பொறுப்பேற்கவில்லை. இதனையொட்டி ஜனாதிபதி ரொச் மார்க் கபோரே நாட்டில் இரண்டு நாள் துக்கதினத்தை நேற்று பிரகடனம் செய்தார்.
புர்கினா பாசோவும், அண்டை நாடான மாலி மற்றும் நைகரும், அடிக்கடி ஜிஹாதி தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றன. இது 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சஹேல் பிராந்தியத்தில் ஜிஹாதிக்களின் வன்முறை பரவத் தொடங்கியதில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
from tkn