2009க்கு முன்பு தமிழ் இளைஞர்களின் கைகளில் பேனை இருக்கவில்லை

இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸ்ஸாநாயக்க

2009ம் ஆண்டிற்கு முன்பு தமிழ் இளைஞர்களின் கைகளில் பேனை இருக்கவில்லை துப்பாக்கிதான் இருந்தது. தமிழ் மக்களுக்கு, தமிழ் இளைஞர்களுக்கு பிரச்சினை இருக்கிறது. அது எமக்கு தெரியும். வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸ்ஸாநாயக்க தெரிவித்தார்.

அமைச்சரை வரவேற்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (6) கல்முனை பிரதேசத்தில் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமிழ் பிரதேசங்களின் அமைப்பாளர் சி. சாந்தலிங்கம் மற்றும் கல்முனை பிராந்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி அமைப்பாளர் ஜெ.கிஷாந்தன், ரஜீவன் ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தமிழ், முஸ்லிம் மக்கள் தங்கள் தலைவர்களின் கதையை கேட்டு அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்தனர்.

தமிழ் இளைஞர்களை போன்றுதான் ஜெ. ஆர். ஜெயவர்தனா, ரணசிங்க பிரேமதாச, சிறிமாவோ பண்டார நாயக்க ஆட்சி காலத்தில் சிங்கள இளைஞர்களும் ஆயுதம் ஏந்தி போராடினார்கள். இதனால் அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து நீங்கள் பெற்ற பயன் என்ன? நான் கிழக்கு மாகாண சபையில் கல்வியமைச்சராக இருந்த வேளை மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று கொடுத்திருக்கிறேன். மஹிந்த ராஜபக்க்ஷ ஜனாதிபதியாக இருந்த கால கட்டதில் கிழக்கு மாகாணத்தில் சேதமடைந்திருந்த பாடசாலைகளை திருத்தியமைத்து கொடுத்திருந்ததை மறந்துவிட்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழர்கள் பெருவாரியாக வாக்களித்திருந்தனர்.

ஜனாதிபதியை கொண்டு வந்தவர்கள் சிங்கள மக்கள், ஆனால் இப்போது தமிழர்களும் முஸ்லிம்களும் வேலைவாய்ப்பு தாருங்கள், அபிவிருத்தி செய்து தாருங்கள் என்று இப்போது எம்மிடம் வருகிறார்கள். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எமக்கு வாக்களித்துவிட்டு வாருங்கள் அனைத்தையும் பெற்று தருவோம் என தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டி.வீரசிங்க, பொதுஜன பெரமுனவின் பிரதேச அமைப்பாளர்கள், பொதுமக்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Wed, 01/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை