கங்கண சூரிய கிரகணம்

யாழ்ப்பாணம், மன்னார், திருமலை, மட்டு. வாகரை பிரதேசங்களில் பார்க்கமுடியும்

‘கங்கண சூரிய கிரகணம்’ நாளை இடம்பெறவுள்ளது. இந்த சூரிய கிரகணத்தை, இலங்கையில் தெளிவாகப் பார்க்கக்கூடியதாக இருக்குமென இலங்கை விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதிக்குப் பின்னர், இந்தச் சூரிய கிரகணத்தைப் பார்க்கக்கூடிய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

இலங்கை நேரப்படி, காலை 8.09 முதல் 11.25 வரையான மூன்று மணித்தியாலங்களும்

15 நிமிடங்களும் இக்கிரகணம் நிகழுகின்ற போதிலும் காலை 9.35 முதல் காலை 9.37 வரையான காலப்பகுதியே உச்ச நிலையாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை இடம்பெறும் இந்த கங்கண, பகுதியளவிலான சூரியக் கிரகணம் இலங்கையின் ஊடாகப் பயணிக்கும் போது பூமியின் மேல் விழும் சந்திரனின் முழுமையான நிழல் 128 கிலோ மீற்றர்கள் விட்டத்தைக் கொண்டிருக்கும். புவியின் சுழற்சி காரணமாக பூமியின் மேற்பரப்பின் மேல் வேகமாகப் பயணம் செய்வதோடு அதன் பயணப்பாதை இலங்கையின் வடபகுதி ஊடாக அமைந்திருக்கும். மன்னார் முதல் திருகோணமலை வாகரை வரை வரையப்படும் கோட்டிக்கு மேலாக யாழ்ப்பாணம் வரை உள்ளவர்களுக்கு இச்சூரிய கிரகணத்தை தெளிவாகவும் அதன் கீழான காலி, ஹம்பாந்தோட்டை வரை உள்ளவர்களுக்கு பகுதியளவிலும் பார்க்கக்கூடியதாக இருக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்ணியல் விஞ்ஞான மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரட்ண தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் பகுதியளவிலான சூரிய கிரகணத்தை காலை 8.09 மணியளவிலும் காலை 9.35 முதல் 9.37 வரையான காலப்பகுயில் கங்கண சூரிய கிரணத்தை அவதானிக்கலாம். கொழும்பு நகரில் காலை 8.10 தொடக்கம் பகுதியளவிலான சூரிய கிரகணத்தை பார்க்கலாம். காலியில் காலை 8.11 முதல் அவதானிக்கலாம். அவ்வேளை சூரியன் சந்திரனால் 87.6 வீதம் மறைக்கப்படும். சூரிய கிரகணம் முற்பகல் 11. 22 முடிவுறும் எனவும் அவர் கூறினார்.

இந்த சூரிய கிரகணத்தை அவதானிக்கவென வடபகுதியில் மாத்திரம் சுமார் எட்டு தொலைநோக்கு காட்டிகள் அமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இச்சூரிய கிரகணத்தைப் பார்வையிடுவதற்காக நேற்று முன்தினம் வரையும் சுமார் 1500 பேர் யாழ்ப்பாண மையத்தில் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதனை இங்கு பார்வையிட சுமார் 5000 பேரளவில் வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தடிப்படையில் இச்சூரிய கிரகணத்தைப் பார்க்கவென சோலர் எட்டிலிக்ஸ் வீவர் என்ற கண்ணாடிகள் 2000 ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன என யாழப்பாண பல்கலைக்கழக பௌதிகவியல் பீட சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் கூறினார். இந்த கிரகணத்தைப் பார்வையிடுவதில் உள்நாட்டு வெவளிநாட்டு ஆர்வலர்கள் யாழ்குடா நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவிலிருந்து ஐந்து விஞ்ஞானிகளும் வந்துள்ளதாகவும் அவர்களும் யாழ்ப்பாணம், கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இணைந்து சூரிய கிரகணம் குறித்து மாணவர்களையும் பொதுமக்களையும் அறிவூட்ட உள்ளனர்.

மர்லின் மரிக்கார்

 

Wed, 12/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை