முல்லைத்தீவில் நாளை: கிளிநொச்சி 29இல்
யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் காணாமல் போனோரின் உறவுகளை சந்தித்து கலந்துரையாடி அவர்களது எதிர்பார்ப்புகள் தொடர்பாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டடத்தில் காணாமல்போனோரின் உறவினர்களுடனான சந்திப்பு எதிர்வரும் 27 ஆம் திகதியும், 29 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்திலும் நடைபெறவுள்ளது.
அதேபோன்று எதிர்வரும் 31 ஆம் திகதி காலை யாழ்ப்பாண மாவட்டத்தில் காணாமல்போனோரின் உறவினர்களை சந்திக்கவுள்ள அமைச்சர், அன்றைய தினமே நண்பகல் வவுனியாவுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் காணாமல் போனோரின் நிலமைகளை அறியத் தருமாறு கடந்த ஆட்சிக் காலத்தில் காணாமல் போனோரின் உறவினர்களினால் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
எனினும் கடந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழ் கட்சிகள், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புக்களை அறிந்துகொள்ளாமல் புறக்கணித்திருந்த நிலையில், அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
from tkn