சிவனொளிபாத மலை யாத்திரை ஆரம்பம்

சிவனொளிபாத மலைக்கான யாத்திரை பூரணை தினமான நேற்று ஆரம்பமாகியது. இரத்தினபுரி, பெல்மதுளை, கல்பொத்த ரஜமகா விகாரையிலிருந்து புனித விக்கிரகங்கள் நல்லதண்ணி பாதை வழியாக நள்ளிரவு மலையுச்சிக்கு எடுத்து செல்லப்பட்டதாக சிவனொளிபாதமலை விஹாரை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்தார்.

இம் முறை நான்கு வீதிகளின் ஊடாக ஊர்வலம் பயணித்தது. அந்த வகையில் பலாங்கொடை - பொகவந்தலாவ வீதியில் ஊர்வலம் பயணித்து, அவிசாவளை, ஹற்றன்– நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாத மலைக்கு ஊர்வலம் சென்றது. மற்றைய ஊர்வலம் குருவிட்ட–இரத்தினபுரி வீதி ஊடாக பயணித்தது. மற்றையது பெல்மதுளை–இரத்தினபுரி – ரஜமாவத்தை வழியாக சென்றது.

சிவனொளிபாதமலை கடல் மட்டத்திலிருந்து 7,359 அடி உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம் மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது.

மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடி சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது. இந்து சமயங்களின் நம்பிக்கைகளின் படி சிவனின் காலடி சுவடாக கருதப்படுவதோடு இஸ்லாமியர்கள் இதை (பாவா ஆதம் மலை) ஆதாமின் காலடி சுவடாக கருதுகின்றனர்.​

சிவனொளிபாதமலைக்கு வருகைதரும் யாத்திரிகர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை முன்னிட்டு நல்லதண்ணீர் நகரில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்துக்கு மேலதிகமாக சீத்தகங்குலதன்ன, இந்திக்கட்டுபான, மழுவ முதலான இடங்களில் தற்காலிக பொலிஸ் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஹற்றன் நல்லதண்ணீர் புகையிரத இணைப்பு பஸ் சேவை ஹற்றன் டிப்போவினால் நடத்தப்படுகிறது. இரத்தினபுரி வழியாகவும், ஹற்றன் வழியாகவும் சிவனொளிபாத மலைக்கான யாத்திரையை மேற்கொள்ள முடியும்.

மது அருந்த மற்றும் எந்தவிதமான இசைக்கருவிகள் கொண்டு செல்ல முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் என பல எண்ணிக்கையிலானோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஹற்றன் சுழற்சி நிருபர்

 

 

Thu, 12/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை