கல்வித்துறை மேம்பாடு; உடனடி மாற்றங்கள் குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுடன் ஆராய்வு

க.பொ.த (உ/த) பெறுபேறுகள் வெளியான உடனேயே பல்கலைக்கு உள்ளீர்ப்பு

கொள்கை பிரகடனத்தில் முன்னுரிமையளிக்கப்பட்ட கல்வித்துறையின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார். கல்வித்துறையின் பல்வேறு அமைப்புகளில் உடனடியாக செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியிருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியான உடனேயே பிள்ளைகளை பல்கலைக்கழகங்களுக்குள் உள்ளீர்ப்பதற்கான முறைமை ஒன்றை வகுப்பதுடன் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டுமென்றும் தகவல் தொழிநுட்ப பாடத்திற்கு முன்னுரிமையளிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும் வெற்றிடங்களுள்ள நிறுவனங்களை கண்டறிந்து வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சியுடன் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும். நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்றவகையில் தொழிற்படை ஒன்றை உருவாக்குதல் மற்றும் அதற்கு உதவும் பாடத்திட்டத்தை தயாரித்தல் தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்தப்படும் என சுட்டிக்காட்டினார்.

கல்வி, உயர்கல்வி அமைச்சர், மற்றும் நிறுவன அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ் விடயங்களை கூறினார்.

மேலும் ஜனாதிபதி பேசுகையில்,

தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உலக பொருளாதாரத்திற்கு திறமை வாய்ந்த இளம் தலைமுறையை உலகிற்கு வழங்கக்கூடிய கல்வி முறைமைக்குள் உடனடியாக பிரவேசிக்க வேண்டியுள்ளது. இதன்போது பரீட்சையை மையமாகக்கொண்ட கல்வி முறைமையிலிருந்து விலகி பிள்ளைகளின் தோல்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமக்க முடியாத சுமைகளை நீக்கும் வகையிலான பின்புலமொன்றை அமைக்க வேண்டும்.

நாட்டின் தேவையையும் சர்வதேச மட்டத்தில் பாடத்திட்டம் மற்றும் கலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ள முறைபற்றியும் கவனம் செலுத்தப்பட வேண்டும். கல்வித்துறை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அரசியலிலிருந்து விலகி கல்வியியலாளர்களினால் அவை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

2018ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளை கூடிய விரைவில் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 2019ஆம் ஆண்டிலிருந்து உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகி குறுகிய காலத்திற்குள் பிள்ளைகளை பல்கலைக்கழகங்களுக்குள் உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வாய்ப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும். மேலும் குறுகிய கால அடிப்படையில் நாட்டுக்குத் தேவையான தொழிற்படை ஒன்றை உருவாக்குவதற்கு பல்கலைக்கழக முறைமைக்கு டிப்ளோமா கற்கைநெறிகளை அறிமுகப்படுத்த வேண்டும்.

தொழிற் சந்தையை இலக்காகக் கொண்டு ஆசிரியர் கல்லூரிகள், ஹோட்டல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளது. மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அழிவுக்குள்ளாக இடமளிக்காது கூடிய விரைவில் தேசிய பல்கலைக்கழக முறைமைக்குள் இணைத்து தேசிய வளமாக பயன்படுத்த வேண்டியது அவசியம்.

நாட்டின் தேவையை கண்டறிந்து பாடநெறிகளை தயாரிக்கும் சந்தர்ப்பத்தை பல்கலைக்கழகங்களுக்கு வழங்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது. இதற்காக பல்கலைக்கழகங்களை வலுவூட்ட வேண்டியுள்ளதுடன், போலியான நியாயங்களில் இருந்து விலகி கல்வித்துறையை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை உட்பட அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பல்கலைக்கழங்களை ஆரம்பிக்க வேண்டும். இதற்காக பெரும் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள பயன்படுத்தப்படாத கட்டிடங்களை புனர்நிர்மாணம் செய்து பயன்படுத்தக்கூடிய வழிவகைகள் குறித்து கண்டறியப்பட வேண்டும்.

விஞ்ஞானம் மற்றும் கணிதத்துறைகளில் அதிகளவு மாணவர்கள் நாட்டுக்கு வழங்க வேண்டியுள்ளது. கலைத்துறையில் கல்விகற்று வருகின்றவர்களை குறுகிய காலத்தில் தகவல் தொழிநுட்ப அறிவுடன் பொருளாதார நடவடிக்கைகளுடன் இணைத்துக்கொள்வதும் மிகவும் முக்கியமானது. உயர்கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு தமது கல்வி நடவடிக்கைகளை நாட்டுக்குள்ளேயே பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படல் வேண்டும்.

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் பாடசாலைகளில் இருக்க வேண்டிய ஆசிரியர்களின் தொகையை வெற்றிடங்கள் ஏற்படாத வகையில் பேணுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

கல்வித்துறைக்காக ஒரு வருடக் காலப் பகுதியில் தேசியக் கொள்கையொன்று வகுக்கப்பட வேண்டும் என்றார்.

Fri, 12/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை