காரைதீவு மாடிவீட்டு தொகுதி
கடந்தசில நாட்களாக பெய்துவரும் அடைமழையையடுத்து காரைதீவு மீள்குடியேற்ற மாடி வீட்டுத் தொகுதிப் பிரதேச கழிவறைக்குழிகள் நிரம்பி பெருக்ெகடுத்துள்ளது.
இதனால் மக்கள் பலத்த அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளனர். அங்குள்ள குடியிருப்பாளர்கள் வெளியேற பிரதேச சபைத் தவிசாளர் கே.ஜெயசிறிலிடம் தகவல் கொடுத்தனர்.
தவிசாளர் ஸ்தலத்திற்கு விரைந்து குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடினார். இதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அதுவரை தற்காலிகமாக மாடிவீட்டுத்தொகுதியின் மேட்டுநிலப்பக்கம் வசிக்க வசதியளிப்பதாக அவர் கூறினார்.
தவிசாளர் சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளோடு தொடர்புகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். சுகாதார சீர்கேட்டினால் தொற்றுநோய் பரவும் ஆபத்து இருந்தால் தற்காலிகமாக வேறிடத்தில் அமருமாறும் சமைத்த உணவு வழங்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.
இக் குழிகளை மூடி புதிய குழிகள் அமைக்க தவிசாளர் ஏலவே முன்னாள் அமைச்சர் மனோகணேசனிடம் பெற்றுக் கொண்ட 20 இலட்ச ரூபாவுக்கு என்ன நடந்தது? என்று மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
ஏலவே 4 மாதங்களுக்கு முன்பு இந்நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்று ஊடகங்களில் அச்செய்தி வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜனிடம் கேட்டபோது அந்நிதியைப் பயன்படுத்த காலஅவகாசம் போதாமையால் அதனை திருப்பி அனுப்பப்போவதாகத் தெரிவித்தார்.
(காரைதீவு குறூப் நிருபர்)
from tkn