அமைச்சு பதவியை எடுப்பதன் ஊடாகவே கிழக்கு தமிழர்களை பாதுகாக்க முடியும்

கிழக்கில் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நாங்கள் செயற்படுவோமானால் தமிழர்களை யாராலும் பாதுகாத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையுருவாகும் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் நாங்கள் உரிமையா சலுகையா என்ற விடயத்தில் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு செயற்படுவோமானால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை யாராலும் பாதுகாத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையுருவாகும். அமைச்சு பதவியை எடுப்பதன் ஊடாகவே எதிர்காலத்தில் கிழக்கு தமிழர்களை பாதுகாக்க முடியும் என்றார்.

மட்டு. ஊடக அமையத்தில் நேற்றுமுன்தினம் (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

13 ஆவது திருத்தச் சட்டம் அமுல் படுத்தப்பட்டு முழு நாட்டிலும் மாகாண சபை நிர்வாக முறை அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கில் இருக்கின்ற தமிழ் கட்சிகள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கூறியிருக்கின்றார்கள். தற்சமயம் எங்களைப் பொறுத்தவரையில் 13வது திருத்த சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளதால் அமுலாக்கப்பட்டுள்ள விடயங்களையும் அமுலாக்கப்படாத விடயங்களையும் பேசுவதற்குரிய களத்தை தமிழ் தலைமைகள் உருவாக்க வேண்டும்.

தமிழ் தலைமைகள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய அரசுடனும் இலங்கை அரசுடனும் பேசுவதற்கான ஒரு களத்தை உருவாக்கி, கையில் இருக்கின்ற அதிகாரத்தை முதல் கட்டமாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் மக்கள் நீண்ட காலமாக உரிமையா சலுகையா என்ற விடயத்தில் கிழக்கு மாகாண தமிழர்கள் உரிமை என்ற அடிப்படையில் மத்திய அரசாங்கத்தில் எந்தவிதமான அமைச்சுப் பதவிகளையோ எடுக்கவில்லை.

அதற்குரிய காரணம் உரிமையா சலுகையா என்ற விடயத்தில் தமிழ் மக்கள் அதை கூடுதலாக எதிர்பார்த்திருந்தார்கள், மத்திய அரசாங்கத்தில் அமைச்சர் பொறுப்புக்களை எடுப்பதென்பது தமிழர்கள் விலை போய் விடுவார்கள் என்று ஒரு நிலைப்பாடு இருந்தது.

ஆனால் தற்சமயம் உள்ள சூழ்நிலையினை பொறுத்தவரையில் கிழக்கு மாகாணத்தில் ஏனைய இனங்களை சேர்ந்தவர்கள் அமைச்சர் பதவியை எடுத்துக்கொண்டு தமிழ் பகுதிகளில் வேண்டா வெறுப்பாக நடந்து கொள்வதும் அந்த விடயத்தில் தமிழர்களாகிய நாங்கள் பாதிப்புகளை எதிர்நோக்கி உள்ளோம்.

கிழக்கு மாகாண தமிழர்களைப் பொறுத்தவரையில் எதிர்காலத்தில் ஒரு அரசியல் அதிகாரத்துடன் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படுகின்ற கட்சிகள் அமைச்சு பதவிகளை எடுத்துக்கொள்ள கூடியவாறு கூடுதலான பாராளுமன்ற ஆசனத்தை பெறுவதற்கு அனைத்து கட்சிகளும் ஒரே கூரையில் போட்டியிடுவதன் மூலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

வெல்லாவெளி தினகரன் நிருபர்-

Wed, 12/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை