உயரிய சமூகமொன்றை உருவாக்க நத்தார் தினத்தில் உறுதி பூணுவோம்

இயேசு பிரான் தனது போதனைகளில் குறிப்பிட்டுள்ளவாறு சகல மக்களையும் சமமாக மதித்துப் போற்றும் உயரிய சமூகமொன்றை உருவாக்குவதற்காக இந்த உன்னத நத்தார் தினத்தில் நாம் அனைவரும் மீண்டும் திடசங்கற்பம் பூணுவோமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களும் இயேசு பாலகனின் பிறப்பைக் கண்ட உவகையில் நத்தார் தினத்தை கொண்டாடுகின்றனர். இதனையிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு தனது நத்தார் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். இவ்வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சமாதானம், சகவாழ்வு ஆகியவற்றின் மகிமையை இவ்வுலகிற்கு எடுத்துரைத்த இயேசு பிரானின் உன்னத போதனைகளால் மக்கள் பக்குவமடைந்துள்ள தருணத்தில் பிறக்கும் இந்த நத்தார், சிறியோர் முதல் பெரியோர் வரை உலக மக்கள் அனைவருக்கும் ஒப்பற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.

இவ்வுலக வாழ்க்கையில் ஒளியேற்றுவதே நத்தாரின் உண்மையான அர்த்தமாகும். இதற்காக எம்மை பற்றியுள்ள சகல தீய எண்ணங்களையும் களைந்து, அன்பு, கருணை, மனித நேயம் ஆகியவற்றால் எமது மனங்களை நிரப்பிக்கொள்வோம். பாவத்திலிருந்து மீண்ட இயேசு பிரான் சகல மக்களுக்கும் காட்டிய ஆன்மீக வழியை நாமும் பின்பற்றுவோம். அதுவே நித்திய வாழ்விற்கான வழியாகும் என்றே கிறிஸ்தவம் போதிக்கின்றது.

“நல்ல உள்ளங்கள் அமைதியடையட்டும்” என்பதையே இக்காலத்தில் இசைக்கப்படும் இறை கானங்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன. அத்தகைய தூய உள்ளங்களைக் கொண்ட ஒரு சமூகமே எமது எதிர்பார்ப்பாகும். ஆண்டவரின் ஆசிர்வாதமும் விருப்பமும் அதுவேயாகும் என்பதில் நாம் நம்பிக்கை கொள்வோம்.

இறை ஆசிர்வாதம் பெற்ற வணக்கஸ்தலங்களில் அண்மையில் முகங்கொடுக்க நேர்ந்த துன்பியல் சம்பவங்கள் மீண்டுமொருமுறை இடம்பெறாதிருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

Wed, 12/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை