ரணிலின் சூழ்ச்சியினாலேயே முஸ்லிம் சமூகம் நாதியற்று இருக்கிறது

முன்னாள் அமைச்சர் அதாஉல்லா

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் சூழ்ச்சியினாலும், தந்திரங்களினாலுமே இன்று முஸ்லிம் சமுதாயம் பயங்கரவாத சமூதாயம் என்று அடையாளப் படுத்தி நாதியில்லாத சமூகமாக மாற்றப்பட்டிருக்கின்றது. இவ்வாறு தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை கிராமத்தில் மக்கள் சந்திப்பும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த நூற்றுக் கணக்கான ஆதரவாளர்கள் தேசிய காங்கிரஸில் இணைந்துகொள்ளும் நிகழ்வும் நேற்று முன்தினம் நடைபெற்றது. பிரதேச சபை உறுப்பினர் ஏ.பி. பதுர்தீனின் இல்லத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் பாலமுனை பிரதேச இணைப்பாளர் கே.எல்.உபைதுல்லா உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டுக்கு சிறந்த தலைவராகக் காணப்படுகின்றார். அவரது ஆளுமை, திறமைகளை உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேசமும் பாராட்டுகின்றது.

ஜனாதிபதிக்கு எதிராக சுமத்தப்பட்ட முதலைக்கதை அரசியலுக்காக சோடிக்கப்பட்ட அப்பட்டமான பொய் என்பதை தற்போது இந்த நாட்டு மக்கள் அறிந்துள்ளனர். இதுபோன்ற பல சதிகள், மோசடியான விடயங்களின் உண்மைகள் மிகவிரைவில் வெளியில் கொண்டுவரப்படவுள்ளன. கிறிஸ்தவ ஆலையங்களில் சஹ்ரானைக்கொண்டு அப்பாவி மக்களை கொலை செய்த அந்த துயர சம்வத்தினுடைய அடிவித்துக்களையும் ஜனாதிபதி கண்டுபிடிப்பார் என நான் நம்புகின்றேன்.

தனி முஸ்லிம் இனவாதத்தை விதைத்து மக்களை ஏமாற்றி வாக்குகளை அள்ளிச் சென்று மொத்த வியாபாரம் செய்யும் அரசியல் தலைவர்களுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தல் நல்லதொரு செய்தியை சொல்லியிருக்கின்றது.

கிழக்கில் அதாஉல்லாவுக்கும் முஸ்லிம்களுக்குமுள்ள பிரச்சினை என்ன என்பதனை நான் கேட்டுக்கொள்கின்றேன். பாலமுனை மக்கள் எனது கேள்விக்கான விடையாகவே சாரை சாரையாக தேசிய காங்கிரஸில் இணைந்து இன்று பதிலளித்தது போன்று கிழக்கிலுள்ள அனைத்து மக்களும் உரிய பதிலை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

அதாஉல்லா சமூதாயத்தைக் காட்டிக்கொடுக்கவில்லை. இந்த நாட்டை ஒரு போதும் காட்டிக்கொடுக்க முயற்சிக்கவில்லை. பிரிவினை இல்லாத இந்த நாட்டில் மூவினங்களும் சேர்ந்து ஒற்றுமையாக வாழ்வதற்கே நாம் என்றும் ஆதரவு வழங்கிவருகின்றோம். இது போன்ற காரணங்களுக்காகவே அதாஉல்லாவை தோற்கடிக்க வேண்டும் என அரசியல் வங்குரோந்துக்காரர்கள் முயற்சிக்கின்றனர்.

தமிழர்களும், முஸ்லிம்களும் ஒரே அரசியல் செய்தவர்கள். கலை, கலாசார பாரம்பரியங்களுடன் வாழ்ந்து வந்தவர்கள். நம்மை ஒற்மையுடன் வழிநடத்திய பல தலைவர்கள் மறைந்து விட்டார்கள். அன்றிருந்த ஒற்றுமையில் தமிழ் பேசுகின்ற மக்கள் என்கின்ற ஒரு உணர்வு மாத்திரமே இருந்தது. அதனால் தமிழ், முஸ்லிம்கள் இடையே கசப்புணர்வு இருக்கவில்லை. காலவோட்டத்தில் மற்றவர்களின் தேவைக்காகவே இரு சமூகங்களும் நல்லிணக்கத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளோம். இன்று நல்லதொரு அரசியல் சூழல் பிறந்துள்ளது. மீண்டும் நாம் எமது முன்னோர்கள் காட்டித்தந்த இன ஐக்கியத்துடனும் ஒற்றுமையுடனும் இந்தநாட்டினை நேசித்தவர்களாக வாழ்வதற்கு முயற்சிப்போம்.

(அம்பாறை சுழற்சி நிருபர்)

Sat, 12/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை