என்னை பலப்படுத்துங்கள்

13 திருத்தத்தை முழுமையாக்க

இந்தியாவே தமிழர் பிரச்சினையை தீர்க்கும்

எதிர்காலத்தில் தமிழ் மக்கள் எனக்கு எந்தளவு பலத்தை தருகின்றனரோ அந்தளவுக்கு 13ஆவது திருத்தச் சட்டத்தை பலப்படுத்துவேன்.

அதனை என்னால் செய்ய முடியும். எனவே மக்கள் என்னை பலப்படுத்த வேண்டும் என மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள்

மத்தியில் எமது கருத்துக்கள் முழுமையாக செல்லவில்லை. எனினும் என்னை நம்பி தேர்தலில் வாக்களித்த மக்களை விட எனக்கு வாழ்த்து தெரிவித்த மக்களின் எண்ணிக்கை பல மடங்காகும்.

என்னுடைய மக்கள் என்னை நம்பி தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்களிக்காததன் காரணமாக நான் அமைச்சு பதவியை ஏற்பதில்லை என்றிருந்தேன்.

எனினும் மத தலைவர்கள் புத்திஜீவிகள் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய அமைச்சு பதவியை எடுத்துள்ளேன்.

கடந்த தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறக் கூடாது என இங்குள்ள தமிழ் தலைமைகள் எனக் கூறுபவர்கள் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டனர். அவரை முதலைக்கு இறையாக்குபவன், வெள்ளைவான் முதலாளி என காரசாரமாக விமர்சித்தனர்.

ஆனால் தேர்தலில் கோட்டாபய வெற்றியடைந்ததும் முந்தியடித்துக் கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அரசில் கூட பங்கெடுக்க தயார் என கூட சொல்லுகின்றனர். இவர்கள் எல்லாம் சுயலாப அரசியல் காழ்ப்புணர்ச்சி போன்றவற்றுக்காக தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.

கடந்த கால நெருக்கடிகளுக்கு வராத சர்வதேசம் இனி வரும் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.

ஏனெனில் சர்வதேசம் இனி தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வராது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியா மட்டுமே அக்கறை காட்டும் சர்வதேசத்தை நம்பி பயனில்லை.

தற்போது தேர்தல் ஒன்று வரப்போகின்றது என்றவுடம் தமிழ் தலைமைகள் எனக் கூறுபவர்கள் சர்வதேசம் என்று கூறி மீண்டும் மக்களை ஏமாற்ற மத்தளம் அடிக்க ஆரம்பித்துள்ளனர். அண்மையில் இந்தியாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதியிடம் 13ஆம் திருத்த சட்டமூலத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதனை தான் நானும் ஆரம்பம் முதல் கூறி வருகின்றோம்.

அந்தவகையில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம். அதற்கு தமிழ் மக்கள் என்னைப் பலப்படுத்த வேண்டும் என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Mon, 12/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை