இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை தாமதமின்றி பெற்றிட புதிய முறை

அமைச்சர் நிமல் அதிகாரிகளுக்கு ஆலோசனை

இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கைகள் கிடைப்பதில் தாமதமாவதன் காரணமாகவே நீதிமன்றில் வழக்கு விசாரணைகளுக்கு தாமதம் ஏற்படுகின்றது என மனித உரிமைகள் மற்றும் நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அதனால் நீதிமன்றங்களில் வழக்குகள் தாமதமாவதைத் தடுக்க இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை  தாமதமின்றி நீதிமன்றத்துக்கு பெற்றுக்கொடுக்கும் முறையொன்றை உருவாக்க வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை நேற்று மேற்கொண்டபோதே அவர் இந்த ஆலோசனையை வழங்கினார்.

இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்காக நவீன உபகரணங்கள் மற்றும் ஆய்வுகூடங்களை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் சர்வதேச தரத்திலான மிக உயர் தரத்தில் ஆய்வுகூடம் மற்றும் உபகரணங்கள் உள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், எவ்வாறாயினும் நீதிமன்றங்களால் கோரப்படும் இரசாயன பகுப்பாய்வு அறிக்கையின் எண்ணிக்கை கடந்த இரண்டு வருடங்ளாக அதிகரித்துள்ளது என்றும் தெரியவித்தார்.

விசேடமாக போதைப்பொருள் பிரிவில் நூற்றுக்கணக்கான அறிக்கைகள் அதிகரித்துள்ளதாக அறிய முடிகின்றது. இத் தாமதத்தை தடுக்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுமதிக்கப்பட்ட 31 பேரை மேலதிகமாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

அந்த நியமனங்கள் வழங்கப்படும்வரை தற்போதுள்ள இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் அவர்களது சாதாரண வேலை நேரத்துக்கு மேலதிகமாக மாலையிலும் மற்றும் வார இறுதி நாட்களிலும் பணியாற்றி அறிக்கைகளை விரைவாகப் பெற்றுக் கொடுக்கக் கூடிய முறையொன்றை தயாரிக்கும்படி அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

 

Tue, 12/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை