மணல் கொள்ளையர்களை பிடிக்க நீதிமன்று உத்தரவு

பிடியாணை பிறப்பிக்கவும் நீதிமன்றம் தயார்

ஊர்காவற்றுறை நீதவான் அறிவித்ததாக சுமந்திரன் தெரிவிப்பு

மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துங்கள், இல்லையேல் அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பதற்கு நீதிமன்றம் தயாராக உள்ளதென ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதவான் கூறியிருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மண்கும்பான் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதிமன்றில் பொதுமக்கள் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பொதுமக்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்று ஆஜரானார். பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

மண்கும்பான் பகுதியில் மணல் கொள்ளை இடம்பெற்றுவந்த நிலையில் பொதுமக்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் இணைந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். எனினும் ஒரு சிலர் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அண்ணளவாக 10 பேர் வரையில் கைது செய்யப்படாமல் உள்ளனர். அவர்களை கைது செய்ய முடியவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் கூறியிருக்கின்றனர். ஆனால் அந்த நபர்கள் ஊருக்குள் வந்து செல்வதாகவும், பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர். அதனை முறைப்பாட்டாளர் பிரசன்னத்தில் நீதிமன்றத்தில் வாய்மூல முறைப்பாடாக கூறியுள்ளோம்.

அதனை கருத்தில் எடுத்துள்ள நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருப்பதுடன், கைது செய்ய முடியாவிட்டால் பகிரங்க பிடியாணை பிறப்பிப்பதற்கு நீதிமன்றம் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.

எனவே இத்தோடு மணல் அகழ்வு நிறுத்தப்படும் என நாங்கள் நம்புகிறோம். மறுபக்கம் கனியவள திணைக்களம் மணல் அகழ்வதற்கான சகல அனுமதிகளையும் இரத்து செய்துள்ளது. எனவே மணலை அகழவும் முடியாது கொண்டு செல்லவும் முடியாது. மணல் மிக முக்கியமான இயற்கை வளம். அதனை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இந்த விடயத்தில் பொது நன்மைக்காக மக்கள் முன்வந்துள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணம் குறூப், பருத்தித்துறை விசேட நிருபர்கள்

 

 

Sat, 12/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை