அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசலை சமாளிக்க புதிய வசதிகள்

எதிர்வரும் பண்டிகைக் காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் அதிகரிக்கக்கூடும் என்பதினால் இதனை சமாளிக்கும் வகையில் வசதிகளை விரிவுபடுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

பண்டிகைக் காலப்பகுதியில், பெறப்பட்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு தடையின்றி பொதுமக்களுக்கு வசதிகளை வழங்குவதே இதன் நோக்கம். இதன் கீழ், பின்னதூவ, கொடகம, கொட்டாவ, கடவத்த உள்ளிட்ட வாகன நுழைவாயில் இடங்களுக்கு அப்பால், வாகனங்களின் எண்ணிக்கையை கவனத்திற்கொண்டு, மேலதிக நுழைவாயல் திறக்கப்படும் என்றும் அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

கொட்டாவையிலிருந்து கட்டுநாயக்க வரையில் பயணிக்கும் போது கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு சந்தர்ப்பங்களில் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்பட்ட போதிலும், அந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் கட்டணம் அறவிடுவதற்கு அமைச்சின் புதிய செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். சீதுவை, ஜாஎல, கட்டுநாயக்க வரையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளாந்தம் 12 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரை அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடவத்தயில் இருந்து கட்டுநாயக்க அதிவேகப் பாதையில் வெளியில் சுற்றுவட்டத்திற்கு இடையில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டதை அடுத்து இங்கு பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

(அ.த.தி)

 

Sun, 12/15/2019 - 15:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை