சிப்பாயை தாக்கி துப்பாக்கி பறிப்பு; முன்னாள் சிப்பாய் கைது

சிப்பாயை தாக்கி துப்பாக்கி பறிப்பு; முன்னாள் சிப்பாய் கைது

வவுனியா, போகஸ்வெவ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் இனந்தெரியாத நபரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன் அவருடைய துப்பாக்கியும் பறித்து செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் கெக்கிராவ பகுதியில் இத் துப்பாக்கியுடன் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் வவுனியா, போகஸ்வெவ பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  

வவுனியா, போகஸ்வேவ பகுதியிலமைந்துள்ள 7ஆவது சிங்க றெஜிமென்ட் இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் காலை தனது வெளிக்கடமைப் பணி முடிந்ததும், இராணுவ முகாமை நோக்கி சென்றுள்ளார்.  

 இதன்போது இனம் தெரியாத நபர்கள் அவரை வாளால் வெட்டி தாக்கியுள்ளதுடன், அவரது துப்பாக்கியையும் பறித்துச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் எம்.ரத்நாயக்க (வயது 24) என்ற இராணுவ வீரர் படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

சம்பவம் தொடர்பாக பொலிசார் மற்றும் இராணுவத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் காணாமல் போனதாக கூறப்பட்ட துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கெக்கிராவ பகுதியில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக கெக்கிராவ மற்றும் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா விசேட நிருபர்

Thu, 12/26/2019 - 09:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை