கென்டர் வாகனம் மரத்துடன் மோதி விபத்து
மூவர் பலத்த காயம்
அட்டாளைச்சேனையில் சம்பவம்
விற்பனைக்காக கோழிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக கென்டர் வாகனம் நேற்று (15) அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மரமொன்றில் மோதுண்டதில் ஏற்பட்ட பாரிய விபத்தினால் 500கோழிகள் இறந்துள்ளதோடு மூவர் பலத்த காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பிரதேசத்தில் இருந்து அக்கரைப்பற்று பகுதியினை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இவ்வாகனம் நேற்று அதிகாலை 5.15 மணியளவில் அக்கரைப்பற்று -கல்முனை பிரதான வீதியின் அட்டாளைச்சேனை சதோச விற்பனை நிலையத்திற்கு முன்னால் இருந்த மரமொன்றில் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தின் மூலம் மூவர் பலத்த காயங்களுக்கு இலக்காகியுள்ளதுடன், வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட சுமார் 500 கோழிகள் இறந்துள்ளன.
இவ்விபத்தின் மூலம் வானத்தில் பயணித்த மூவரில் இருவர் பலத்த காயங்களுக்கு இலக்காகிய போதிலும் அவ்வாகனத்தின் சாரதி சேதமடைந்த வாகனத்தின் பாகத்தில் அகப்பட்டமையால் அவரை மீட்டெடுக்கும் முயற்சியில் சில மணிநேரம் மக்களுக்கு போராடியும் முடியாமல் போனதையடுத்து கனரக வாகனத்தின் உதவியுடன் சாரதி மீட்கப்பட்டார். இவ்வாறு மீட்கப்பட்ட சாரதி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும், மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு நேற்று(15) காலை மாற்றப்பட்டார். இவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
(அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)
from tkn