பிரதான வேட்பாளர்களுக்கு சிவாஜிலிங்கம் சவால்

தமிழ் மக்களுக்கு நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? ஏன் உங்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென பகிரங்க விவாதத்திற்கு என்னுடன் வரமுடியுமா? என பிரதான வேட்பாளர்களுக்கு எம்.கே சிவாஜிலிங்கம் பகிரங்க சவாலை ஊடகங்கள் மூலமாக அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வொய்ஸ் ஒவ் மீடியா ஊடக நிலையத்தில் வெள்ளிக்கிழமை (1) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

தமிழ் மக்களுக்கு நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? ஏன் உங்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று பகிரங்க விவாதத்திற்கு என்னுடன் வரமுடியுமா? வடக்கு கிழக்கில் உங்களுக்கு வருவதற்கு கஸ்டமிருந்தால் கொழும்பிலோ அல்லது சஜித் பிரேமதாசாவினுடைய இடத்திலோ அல்லது கோட்டாபயவுடைய ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலோ, நான் வருவதற்கு தயாராகவிருக்கின்றேன்.

அதேபோல அநுரகுமார திஸாநாயக்க சொல்லட்டும். எந்த சிங்கள ஊருக்கு வரவேண்டுமோ நான் பொது மேடைக்கு வரத்தயார். சிங்கள மொழியில் பகிரங்க விவாதத்திற்கு சவால் விடுகின்றேன்.

நாங்கள் தமிழ் மக்களுடைய வாக்குகளைப் பிரிப்பதற்காகவா போராடுகின்றோம் அல்லது தமிழ் மக்களுக்கான நீதியைக் கோரியா போராடுகின்றோம் என்பதை தெரிந்து கொள்ளட்டும். என்னிலே பிழையிருந்தால் என்னை அம்பலப்படுத்துங்கள். நான் சவால் விடுகின்றேன். மூன்று பேரும் ஒரே இடத்தில் வரமுடியாதென்றால் சொல்லுங்கள். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட இடத்திற்கும் நான் வருகின்றேன்.

தொலைக்காட்சிகள் பார்த்து நிற்கட்டும். என்னுடனான இந்த பகிரங்க விவாதத்திற்கு நீங்கள் தயாரா? இதை உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியுமா? என்று உங்களைக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

நீங்கள் முடியுமென்றால் அந்த இடத்திற்கு வருவதற்கு நான் எப்போதும் ஆயத்தமாகவுள்ளேன். இந்த சவாலை ஊடகங்கள் வாயிலாக விடுகின்றேன் என்றார். நான் என்னுடைய தேர்தல் அறிக்கையிலே ஒரு முக்கியமான செய்தியை சொல்லியுள்ளேன்.

மூன்று மாதங்களுக்குள் புதிய ஜனாதிபதியாக வருகின்றவர் ஒருவேளை சஜித்தாக இருக்கலாம் அல்லது கோட்டாபயவாக இருக்கலாம்.

ஒரு அரசியல் தீர்வுக்கான திட்டத்தை அவர் ஆரம்பிக்கத் தவறுமிடத்து நாங்கள் சர்வதேச ரீதியாக ஐக்கிய நாடுகள் சபை மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி என்ற அடிப்படையில் நாங்கள் வடக்கு ,கிழக்கு பிராந்தியத்தில் ஒருபொதுசன வாக்கெடுப்பைக் கோருவோம் என்பதை இந்த தேர்தல் மூலம் வெளிப்படுத்தி நிற்கின்றோம்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சென்று நீதியை நிலைநாட்டுவது. இடையில் நீங்கள் தருவதாக இருந்தால் நாங்கள் அதைக் குழப்பவில்லை. நாங்கள் ஆதரவு வழங்குவோம்.

ஆனால் ஏழு தடைவை ஏமாற்றப்பட்டு போன நாங்கள் எட்டாவது தடவையும் இனியும் ஏமாற்றப்பட்டு போனதாக இருக்கக் கூடாது.

இன்று நாட்டிலுள்ள இரண்டு பிரதான கட்சிகளும் தமிழ்மக்களின் பிரதான இனப் பிரச்சனைக்கு தீர்வு தரவில்லை. நீலக்கட்சியும் பச்சைக்கட்சியும் தமிழ்மக்களுக்கு கறுப்பான எண்ணங்களை தந்துள்ளன.

கடந்த 72 வருடங்கள் ஏமாறியதுபோதும். இன்னும் நாங்கள் ஏமாறத் தயாரில்லை. இருகட்சிகளும் தமிழ்மக்களை வாழவைக்கவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேசத்துக்கு எடுத்துரைக்கவே நான் ஜனாதிபதி தேர்தலில் குதித்துள்ளேன். எனக்கு வாக்களிப்பதால் சர்வதேசம் ஒரு முடிவை எடுத்து இலங்கையின் அதிபர்களுக்கு அழுத்தம் கொடுக்கும்.

இன்று தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சினை தீர்ப்பதற்கே தமிழ் மக்களை ஏமாற்றிய கடைசித் தலைவர்களாக மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும்தான் இருக்கவேண்டுமே ஒழிய சஜித் ஏமாற்றி விட்டார், கோட்டா ஏமாற்றி விட்டார் என்ற நிலைமைக்கே இடமில்லை என்றார்.

 

(வெல்லாவெளி தினகரன் நிருபர்-)

Mon, 11/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை