ஊருக்குள் நுழைய முற்பட்ட இராட்சத முதலையால் பதற்றம்

அம்பாறை அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றிலிருந்து இரவு வேளையில் வெளியேறிய இராட்சத முதலை பாதையை ஊடறுத்து ஊருக்குள் நுழைய முற்பட்டதனால் மக்கள் பதற்றமடைந்தனர்.

(27) இரவு கோணாவத்தை பாலத்தடி வீதியை ஊடறுத்து ஊருக்குள் நுளைய முற்பட்ட போது மக்கள் மத்தியில் பெரும் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டதுடன் அதனை செல்லவிடாது இரும்பு வலைவைத்து தடுத்து நிறுத்தினர்.

இரவு 8.30 மணியளவில் வீதிக்கு வந்த சுமார் 10 அடி நீளமான இந்த இராட்சத முதலையை பார்ப்பதற்கு இரவு 10.30 மணிவரையில் அதிகளவிலான மக்கள் அங்கு கூடியிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து உடன் பொலிஸார் அங்கு வருகை தந்ததுடன் வன ஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களுக்கும் இது தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டது.

அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸாரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையும் இணைந்து முதலையை பாதுகாப்பான முறையில் பெகோ கனரக வாகனத்தின் உதவியுடன் உளவு இயந்திரப் பெட்டியில் ஏற்றப்பட்டு கழியோடை ஆற்றில் விடுப்பட்டது.

அம்பாறை சுழற்சி நிருபர்

Sat, 11/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை