இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானில் புலமைப்பரிசில்

இலங்கையைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் பாகிஸ்தானிலுள்ள பல்கலைக்கழகங்களிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் கல்வி கற்கக்கூடிய வகையில் புலமைப்பரிசில்களை வழங்க பாகிஸ்தான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் சட்டத்தரணி என். எம் சஹீட் தெரிவித்தார்.

இப்புலமைப்பரில் திட்டம் அடுத்துவரும் ஐந்து வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும். அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்தின் ஊடாக இப்புலமைப்பரிசில் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இப்புலமைப்பரிசிலின் கீழ் பாகிஸ்தான் பல்கலைக்கழகங்களிலும், உயர்கல்வி நிலையங்களிலும் இலங்கை மாணவர்கள் கல்வி கற்க முடியும். கட்டணம், விரிவுரைக் கட்டணம், தங்குமிட வசதி, உணவு, கற்கை கொடுப்பனவு மற்றும் விமான டிக்கட் ஆகிய வசதிகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

பாகிஸ்தான் - இலங்கை உயர்கல்வி ஒத்துழைப்பு திட்டத்தின் செயற்றிட்ட முகாமையாளர் கலாநிதி அர்ஷத் பஷீரை அண்மையில் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவை மேலும் மேம்படுத்தும் நோக்கிலும் கலாசாரம், பாரம்பரியம் தொடர்பில் இரு நாட்டு மாணவர்கள் மத்தியில் புரிந்துணர்வை மேலும் ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டுமே இப்புலமைப்பரிசில் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

Fri, 11/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை