இனங்களை மூட்டிவிடும் சதி முயற்சியில் கோட்டா தரப்பு மும்முரம்

கல்முனையில்  சஜித் தெரிவிப்பு

வடக்கு, கிழக்கில் மாத்திரமல்ல முழு இலங்கையிலும் முஸ்லிம்களிடம் சென்று தமிழர்களையும் தமிழர்களிடம் சென்று முஸ்லிம்களையும் சிங்களவர்களிடம் சென்று தமிழர்களையும் முஸ்லிம்களையும் மூட்டிவிட்டு இனங்களுக்கிடையில் பிரச்சினையை உருவாக்கும் சதி முயற்சிகளில் எதிர்த்தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இனவாதத்தை தூண்டி இந்த நாட்டை சின்னா பின்னமாக்க எடுக்கப்படும் சதி திட்டங்களுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கல்முனையில் மக்களைக் கேட்டுக்கொண்டார் .

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கடந்த சனிக்கிழமை கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் பிரசாரக்கூட்டம் நடைபெற்றது. கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நடை பெற்ற இந்தக்கூட்டத்தில் கட்சி பேதம்

மறந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சந்தாங்கேணி மைதானம் நிறைந்த மக்கள் முன்னிலையில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அழுத்தகமையிலும், பேருவளையிலும் முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல்களை உடைத்து சேதப்படுத்தி அங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தியவர்கள் சாய்ந்தமருத்துக்கு சென்று அங்குள்ள பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருவோம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

குறிப்பாக கல்முனையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிரச்சினை இருக்கின்றது. அந்தப் பிரச்சினைக்கான தீர்வை நானே கல்முனைக்கு வந்து பெற்றுத் தருவேன் என்ற வாக்குறுதியை உங்களுக்கு வழங்கி வைக்கிறேன்.

நற்பிட்டிமுனை விசேட நிருபர்

Mon, 11/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை