அரச அதிகாரிகளை எப்.சி.ஐ.டீக்கு கொண்டு செல்வதை ஒழிக்க சட்டம்

அரசாங்க அதிகாரிகளை எப்.சி.ஐ.டீ.க்கு கொண்டு செல்லும் முறைமையை இல்லாதொழிப்பதற்கு விசேட சட்டமொன்றை கொண்டு வரப்போவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் விசேட வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும், அமைச்சரவை தீர்மானங்கள் மூலம் பெருமளவு நிவாரணம் மக்களுக்கு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையிலுள்ள நகர அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சில் நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்ற பிரதமர் அங்கு அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார். மேலும் உரையாற்றுகையில்,

தற்போதைய அரசாங்கத்துக்கு கொள்கையுடனான வேலைத்திட்டங்கள் உள்ளன. அதனை சாதகமாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரச அதிகாரிகளும் சிறப்பாக செயற்படுவது அவசியமாகும்.

எவர் எந்த அரசியல் கட்சி அல்லது நோக்கத்தைக் கொண்டவராயினும் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும். கடந்த காலங்களில் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை சிலர் அபகரித்துக்கொண்டனர். அதனை நாம் அனுமதிக்கப் போவதில்லை.

உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரங்கள் அவசியம். வேறு நிறுவனங்களில்

 உள்ள அதிகாரங்களை பறித்தெடுத்து எமது அதிகாரத்தை பலப்படுத்த வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. இவ்வாறு அதிகாரங்களை பறித்துக்கொள்ளும் போது பல தரப்பினரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரும்.

எமது நாட்டில் மிகவும் சிறிய அமைச்சரவை நேற்று கூடியது. அதில் மக்களுக்குத் தேவையான பாரிய திட்டங்களுடனான யோசனைகள் முன்வைக்கப்பட்டன. பொருளாதார புத்தெழுச்சி தொடர்பாக அங்கு விடயங்கள் முன்வைக்கப்பட்டன. இதன்மூலம் பெருமளவு நிவாரணம் மக்களுக்கு கிடைக்கும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 11/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை