ஹொங்கொங் ஆர்ப்பாட்டக்காரர் பொலிஸாரிடையே கடும் மோதம்

ஹொங்கொங் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி முற்றுகையிட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதற்கு பொலிஸார் முற்பட்டபோது மீண்டும் வன்முறை வெடித்தது.

கவுலூன் மாவட்டத்தில் உள்ள ஹொங்கொங் பல்துறைதொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். சிலர் கவணைப் பயன்படுத்தித் தாக்கினர். மேலும் சிலர் வளாகத்திற்கு வெளியே மரங்களுக்கு தீவைத்தனர்.

செங்கற்கள், தீ குண்டுகள், வில் மற்றும் அம்புகள் போன்ற மேம்பட்ட ஆயுதங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்தினர்.

அவர்களை அங்கிருந்து விரட்ட பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். முன்னதாக ஆர்ப்பாட்டங்களின் போது பயன்படுத்தப்பட்ட செங்கற்கள், குப்பைகளைச் சாதாரண உடையில் வந்த சீன இராணுவ வீரர்கள் சுத்தம் செய்தனர். அவர்களுடன் ஹொங்கொங் தீயணைப்பு வீரர்களும் பொலிஸாரும் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுப் பணிகளை மேற்கொள்ள ஹொங்கொங் அரசு தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும், தாமாக முன்வந்து அந்தப் பணிகளை மேற்கொண்டதாகவும் சீன இராணுவம் தெரிவித்துள்ளது.

ஆனாலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் சீன இராணுவத்தின் வருகை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஹொங்கொங் பல்கலைக்கழகத்தில் மூண்ட புதிய வன்முறையால், மாணவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து பாடசாலைகளும் இன்றும் (திங்கள்) மூடப்பட்டிருக்கும் என்ற கல்வி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜனநாயக சீர்த்திருத்தங்களை வலியுறுத்தி ஹொங்கொங் மக்கள் கடந்த ஐந்து மாத காலமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் முகமூடி அணிவதற்குக் கடந்த மாதம் அரசாங்கம் தடை விதித்தது. அந்த உத்தரவு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என ஹொங்கொங் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அடிப்படைச் சட்டத்துடன் அந்த உத்தரவு முரண்படுவதாக, உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது.

1997இல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சீன ஆட்சிக்கு மாறியபோது ஹொங்கொங்கிற்கெனச் சிறிய அளவிலான அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.

Tue, 11/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை