சட்ட விதிமுறைகளை பின்பற்றி உறவுகளை நினைவு கூருங்கள்

அமைதியான வழியில் உரிய சட்டவழிமுறைகளைப் பின்பற்றி நினைவேந்தல் நிகழ்வுகளில் எமது மக்கள் கலந்துகொள்ள வேண்டுமெனத் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அறிக்கையொன்றினூடாக இந்தவேண்டுகேளை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

விடுதலை வீரர்களை நினைவு கூர்ந்து அவர்கள் சார்ந்த ஒரு ஒட்டுமொத்த மக்கள் கூட்டமும் வருடா வருடம் நினைவு நாளை அனுஷ்டிப்பது அந்த விடுதலை வீரர்களின் தியாகத்தை நன்றியுடன் நினைவு கூருவதற்கு மட்டுமன்றி அவர்களின் உறவினர்களின் உள்ளக் குமுறல்கள் மற்றும் வேதனைகளுக்கான ஓர் ஆறுதலை அளிப்பதற்கும் வழிவகுக்கிறது. ஆனால், யுத்தம் நடைபெற்றபோது தமது உயிர்களை நீர்த்த விடுதலை வீரர்களை கார்த்திகை மாதத்தில் நினைவு கூருவதற்கு கடந்த காலங்களில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு பல்வேறு தடைகளும் இடைஞ்சல்களும் நாகரிகமற்ற முறையில் ஏற்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.

இருந்த போதிலும், சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதி ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத முறையில் மிகவும் அமைதியான முறையில் உணர்வு பூர்வமாக கார்த்திகை மாத நினைவு கூரலை எமது மக்கள் செய்து வருகிறார்கள்.

இன்று 27 ஆம் திகதி வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் நினைவுநாள் நிகழ்வுகள் அமைதியான முறையில் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அறிகின்றேன். அமைதியான வழியில் உரிய சட்ட வழிமுறைகளை பின்பற்றி எமது மக்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

நாட்டில் நிலையான சமாதானத்தையும், இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு பாடுபடப்போவதாக கூறியிருக்கும் புதிய அரசாங்கம் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் எந்த இடையூறுகளுமின்றி நடைபெறுவதற்கு ஆவன செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்.

Wed, 11/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை