மீண்டும் ஒரு முறை தமிழ் மக்களுக்கு இருள்மயமான வாழ்வு ஏற்படக்கூடாது என்பதற்காகவே சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்க வேண்டிய நிலை உருவானதாக பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மாபெரும் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கோட்டாபயவை ஏன் நாம் நிராகரிக்க வேண்டும் என்பதே எமது முதல் கேள்வியாகும். அவர்களது ஆட்சிக்காலத்தில் வட,கிழக்கிலே வாழும் தமிழ் மக்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலை காணப்பட்டது.
ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது. பல இளைஞர்களும் யுவதிகளும் காணாமல் ஆக்கப்பட்டனர். எங்களது நிலம் கொள்ளையடிக்கப்பட்டது. அப்படியான ஆட்சி மீண்டும் ஒரு முறை வரக்கூடாது என்பதற்காகவே அன்னச்சின்னத்திற்கு வாக்களித்து நமது உரிமையை பெறுவதுடன் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள மக்களின் ஏகோபித்த கருத்துடன் 95 வீதத்திற்கும் மேலான மக்கள் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்து சிறந்த ஜனாதிபதி ஒருவரை உருவாக்குவீர்கள் எனும் நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வாச்சிக்குடா விஷேட நிருபர்
from tkn