அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தேர்தல் சட்டதிட்டங்களை மீறாது செயற்பட வேண்டும்

மன்னார் உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன்

எதிர்வரும் இரண்டு வாரங்களும் தேர்தல் சட்ட திட்டங்களை மீறும் செயல்பாடாக அமையும் என்பதால் கட்சியை சோர்ந்தவர்கள் தேர்தல் சட்ட திட்டங்களை மீறாது செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதுடன் சில வாக்களிப்பு நிலையங்களில் அரசியல் தலைவர்கள் முரண்பட்ட சம்பவங்களும் காணப்பட்டதால் குறிப்பிட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்படும் என மன்னார் உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தற்பொழுது ஜனாதிபதி தெரிவுக்கான முன்னோடி நடவடிக்கைகளை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் கடந்த ஒன்றரை மாதங்களாக தேர்தல் தொடர்பான செயல்பாடுகளில் சட்டங்கள், எமக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள், எதிர் காலத்தில் தேர்தல் முடிவு வரைக்கும் நாம் எதிர்கொள்ள இருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய வேண்டிய நிலை இருக்கின்றது. அதற்காகவே மன்னார் மாவட்டத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் கொண்ட கட்சி முகவர்களை அழைத்து தேர்தல் திணைக்களம் மேற் கொண்டு வரும் நடவடிக்கைகளை தெளிவுப்படுத்த எமக்கு கட்டுப்பாடு உண்டு.

அதற்காக கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தலை முன்னிட்டு இனி வரும் இரண்டு வாரங்களும் சிக்கல் நிறைந்ததாக காணப்படும்.தேர்தல் சட்டங்களை மீறும் நாட்களாகவே இவை இருக்கும் என எதிர் பார்க்கின்றோம். கடந்த தேர்தலில் 30 முறைப்பாடுகளுக்கு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஆனால் பின் இவ் வழக்குகளை பொலிசார் வாபஸ் செய்ததையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 76 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்ட செயலகத்தில் 8 வாக்குகள் எண்ணும் நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்கும் தலா இரண்டு பொலிசார் கடமையில் ஈடுபடுத்தினால் போதுமானது என நினைக்கின்றோம்.

வெளியில் ரோந்து சேவையில் அதிகமான பொலிசார் ஈடுபடுவது நலமாகும். கடந்த தேர்தல் காலங்களில் அரசியல் தலைவர்கள் வாக்களிக்கும் நிலையங்களில் முரண்பட்ட சம்பவங்களும் உண்டு.

ஆகவே இவ்வாறு அடையாளமிடப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் விசேட பொலிஸாரை பணியில் ஈடுபடுத்துவது சிறப்பாக இருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.

( மன்னார் குறூப் நிருபர் )

Thu, 11/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை