கிழக்கிற்கு பெருமை; வாழைச்சேனையில் பாராட்டு
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டிகளில் குண்டெறிதல் போட்டியில் கிழக்கு மாகாணம் சார்பாக பங்குபற்றி தேசியத்தில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவன் அய்மனுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேற்று (02) ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக நடைபெற்ற இவ்வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, குறித்த வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை சாதனை மாணவன் வாகனத்தில் ஏற்றப்பட்ட வீதி ஊர்வலம் ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசங்களினூடாக பாடசாலையை சென்றடைந்தது.
பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம். தாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், பாடசாலை நலன்விரும்பிகள், போன்றோர் கலந்து கொண்டனர்.
பதினான்கு வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கிடையில் வெள்ளிக்கிழமை (01) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற குண்டெறிதல் போட்டியில் 15.03 மீற்றர் தூரத்தை பதிவு செய்து புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார். இதற்கு முன்னர் தேசிய சாதனையாக 13.55 மீற்றர் தூரம் பதிவாகியிருந்தது.
குறித்த போட்டியில் தேசிய சாதனையை நிலைநாட்டிய மாணவனுக்கும் மாணவனை பயிற்றுவித்த ஆசிரியர்களான ஆர். ஆலோஜிதன், பீ.ரீ.பிரதீப், எம்.ஐ. பஹீம் ஆகியோர்களுக்கு பாடசாலையின் அதிபர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(எச்.எம்.எம். பர்ஸான்)
from tkn