கடந்த அரசாங்கத்தில் அமுலிலிருந்த எரிபொருள் விலைச் சூத்திரம் தொடர்ந்து அமுலில் இருக்காதென பிரதமர் மஹிந்த ராஜபகஷ தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கம் செய்தது போன்று ஒவ்வொரு ரூபாயாக எரிபொருள் விலையை அதிகரிக்க எந்தவொரு எதிர்பார்ப்பும் எமக்கில்லை. மக்களின் எதிர்பார்ப்பின் பிரகாரம் எரிபொருள் விலையொன்றை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் இராஜாங்க அமைச்சராக வாசுதேவ நாணயக்கார நேற்று அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந் நிகழ்வில் பங்கேற்றிருந்த பிரதமரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலான குற்றப்புலனாய் பிரிவின் விசாரணை அறிக்கை நேற்று இரவு தமக்கு கிடைத்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
முறைப்பாடு இல்லாது விசாரணை செய்வது கடினமாகும். முறைப்பாடுகள் கிடைக்காவிட்டாலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று இலங்கையில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் தூதுவரை சந்தித்த போது கூறியதுடன், விசாரணைகளுக்கு ஆதரவை வழங்குமாறு கோரினேன் என்றும் அவர் கூறினார்.
from tkn