மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

பாதுகாப்புக்காக 1688 பொலிஸார் கடமையில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்புக்கான சகல ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிக்க மொத்த வாக்காளர்களாக 398,301 தகுதி பெற்றுள்ளனர்.

இவர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவான சகல ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தோடு வயோதிபர்கள் மற்றும் விசேட தேவை உடையவர்களும் வாக்களிக்க தேவையான சகல வசதிகளும் வாக்கெடுப்பு நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் கடமைகளுக்கான பிரதம கணக்கெடுப்பாளர்கள், உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் ,சிரேஸ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள், கனிஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்கள் ஏனைய கடமைகளுக்கு இணைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான ஏனைய அறிவூட்டல்கள் அனைத்தும் முடிவுறுத்தப்பட்டு அவர்களுக்கான நியமன கடிதங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

பாதுகாப்பு கடமைகளுக்காக 1688 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 320 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இணைப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கணக்கெடுப்பு நிலையங்களுக்காக பாதுகாப்பு கடமைக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதனை தவிர ரோந்துப்பணியில் விசேட பொலிஸ் பிரிவினர் பங்கேடுக்கவுள்ளனர்.

நாளை 15ம் திகதி வாக்குப்பெட்டிகள் கையளிப்பதற்கு என 54 உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் கடமைக்கு இணைக்கப்பட்டு செயற்படவுள்ளனர்.

அதனை தவிர வலயங்களுக்கு பொறுப்பான உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களும் அன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்க வேண்டும்.

தேர்தல் பணியினை கண்காணிப்பதற்கான கண்காணிப்பு குழுவின் சர்வதேச, உள்நாட்டு கண்காணிப்பாளரின் தங்களது கண்காணிப்பு பணியினை ஆரம்பித்துள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்தார்.

இதுவரை 53 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் 35 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் 18 முறைப்பாடுகளுக்குரிய தீர்வு பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஆறு முறைப்பாடுகள் வன்முறைகளாகவும் 47 முறைப்பாடுகள் தேர்தல் விதி மீறுதல்களாகவும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

(காத்தான்குடி விஷேட நிருபர்)

Fri, 11/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை