இலங்கை கடற்படை கால் பந்தாட்ட அணி வெற்றி

இலங்கை கடற்படை கால்ப்பந்தாட்ட அணிக்கும், கொழும்பு யங் சில்வர் கால்பந்தாட்ட அணிக்குமிடையில் நடைபெற்ற சிநேகபூர்வ கண்காட்சி கால்பந்தாட்ட போட்டியில் இலங்கை கடற்படை கால்ப்பந்தாட்ட அணி 04 : 00 கோல்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டி சனிக்கிழமை (23) மாலை புத்தளம் மாவட்டவிளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.

இலங்கையின் பிரபல அணிகளை புத்தளம் நகருக்கு வரவழைத்து சிறந்த போட்டிகளை ரசிகர்கள் கண்டுகளிக்க வேண்டும் என்கின்ற நோக்கில் புத்தளம் சில்வர் ஸ்பூன் விளையாட்டு கழகத்தினர் இந்த போட்டியை ஏற்பாடு செய்ததன் நிமித்தம் இரு அணிகளும் புத்தளம் வருகை தந்து இந்த சிநேகபூர்வ கண்காட்சி ஆட்டத்தில் பங்கெடுத்தனர்.

இடைவேளைக்கு முன்னதாக இலங்கை கடற்படை அணி 02 கோல்களை புகுத்தி இருந்தது. எனினும் இடைவேளைக்கு பின்னரே ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. போட்டி நிறைவு பெறும் கடைசி நிமிடம் வரைக்கும் போட்டி விறுவிறுப்பாக அமைந்திருந்தது. இடைவேளைக்கு பின்னர் இலங்கை கடற்படை அணியினரின் அபார ஆட்டத்தில் மேலும் இரு கோல்கள் புகுத்தப்பட்டன. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் இலங்கை கடற்படை அணியினர் 04 : 00 கோல்களினால் வெற்றி பெற்றனர். இலங்கை கடற்படைஅணிக்காக ஏ.ஏ.நாலக இரு கோல்களையும், முஹம்மது நாகூர் மீரா மற்றும் தர்சன சதுர ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

போட்டிக்கு நடுவர்களாக எம்.எஸ்.எம். இனாஸ், எம். சர்ஜூன், எம்.எம். சபான் ஆகியோர் கடமையாற்றினர்.

போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை கடற்படைஅணியினருக்கு அதிதியாக கலந்து கொண்டிருந்த ஓய்வு பெற்ற சர்வதேச நடுவர் ஏ.சி.எம்.ஜமால்தீன் வெற்றிக்கிண்ணத்தினை வழங்கி வைத்தார்.

புத்தளம் தினகரன் நிருபர்

Tue, 11/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை