வட, கிழக்கு தமிழர்கள் தமக்கான சிறந்த வாய்ப்பினை இழந்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்-ஷ வெற்றிபெறுவார் என்று தெரிந்திருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் பணத்தினை பெற்றுக்கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்துள்ளதாகவும் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
52வீதம் வாக்குகளைப்பெற்று ஜனாதிபதியாக கோட்டாபய தெரிவு செய்யப்படுவார் என நான் கூறியது போன்று தற்போது நடந்துள்ளது. வட, கிழக்கு தமிழ் மக்கள் சிறந்த வாய்ப்பினை இழந்திருக்கின்றார்கள்.
கோட்டாபய ராஜபக்-ஷ நிச்சயமாக வெற்றிபெறுவார் என்று தெரிந்திருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் பணத்தைப் பெற்றுக்கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றி மக்களை திசைதிருப்பி வாக்குகளை
சிதறடித்துள்ளனர்.தமிழ் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களித்திருந்தால் நாங்கள் உரிமையுடன் எங்களது விடயங்களை கேட்டு சாதிப்பதற்கான நிலையிருந்தது. மஹிந்த ராஜபக்ஸவே பிரதமராக வரவிருக்கின்றார்.பாரட்சமற்ற வகையில் அவர் செயற்படுவார்.
இருந்தபோதிலும் தமிழ் மக்கள் புத்திசாதுரியமாக செயற்படவேண்டிய காலம் இது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளை நம்பிக்கொண்டு வாக்குகளை வீணடித்துக்கொண்டிருந்தால் எதுவித நன்மையினையும் தமிழ் மக்கள் பெறப்போவதில்லை.
இந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய தோல்வியடைந்திருந்தால் கிழக்கு மாகாணம் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்
from tkn